மும்பையை 'செங்கடலாக்கிய' விவசாயிகள் பேரணி.... பணிந்தது பாஜக அரசு!
மும்பையை செங்கடலாக்கிய விவசாயிகள் பேரணியால் பணிந்தது பாஜக அரசு.
Recommended Video
மும்பை: விவசாய கடன் தள்ளுபடி, பழங்குடியினருக்கே நிலங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் நடத்திய பேரணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு உறுதி அளித்துள்ளது.
திரிபுராவில் இடதுசாரிகளை வீழ்த்திவிட்டதாக இந்துத்துவா சக்திகள் கொண்டாடி மகிழ்ந்தனர். திரிபுராவில் இடதுசாரி அலுவலகங்களை சூறையாடி தீக்கிரையாக்கி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
மகாராஷ்டிரா இடதுசாரிகள் பேரணி
இந்தியாவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன தொடர்பு என கேள்வி கேட்டனர் இந்துத்துவா அமைப்பினர். ஆனால் அவர்கள் கனவிலும் நினைக்காத ஒன்று மகாராஷ்டிராவில் நடந்தது.
200 கிமீ நடைபயணம்
பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செங்கொடி ஏந்தி 200 கி.மீ. நடைபயணமாக நாசிக்கில் இருந்து மும்பைக்கு பேரணியாக அலைகடலென திரண்டனர்.
விடிய விடிய உபசரிப்பு
மகாராஷ்டிரா அரசை அலறவிட்ட இந்த 'செங்கடல்' பேரணிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தந்தன. இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் விடிய விடிய காத்திருந்து மும்பைக்குள் நுழைந்த விவசாயிகளுக்கு உணவு அளித்து உபசரித்தனர்.
கோரிக்கைகளை ஏற்ற பாஜக அரசு
6 நாட்கள் நெடும்பயணமாக நடந்து வந்த விவசாயிகள் மும்பை ஆசாத் மைதானத்தில் கட்டுக்கோப்பாக அணி திரண்டனர். இந்த பெரும் கிளர்ச்சியை கண்டு அதிர்ந்து போன மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.