ஏழைகளுக்கான மானியங்களை மத்திய அரசு நிறுத்தாது... முறைப்படுத்தவே செய்கிறோம் - மோடி உறுதி
டெல்லி: நாட்டில் ஏழை மக்களுக்காக வழங்கப்படும் மானியங்களை மத்திய அரசு நிறுத்தாது எனவும், அதனை முறைப்படுத்தவே அரசு விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
உண்மையான சீர்திருத்தம் என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இயற்கை மற்றும் மனித வளங்களை பயன்படுத்துவதை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் அதில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதை அதிகப்படுத்த முடியும். மக்கள் உயர அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். பல சந்தர்ப்பங்களும் அளிக்கப்பட வேண்டும். உற்சாகமானவர்களுக்கு வாய்ப்புகள் என்பது ஆக்சிஜன் போன்றது. இது குறைந்த அளவில் இருக்கக்கூடாது.
எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். ஏழைகளை உயர்வடைய செய்ய வேண்டும். அரசு நேர்மையாகவும், முன்னோக்கி செல்கின்ற அரசாக இருந்தால், இதன் பலன்கள் ஏழைகளுக்கு கிடைக்கும். ஏழை மக்கள் மற்றவர்களால் பாதிக்கப்படுவதை விட, மோசமான மக்களால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். உலக நாடுகளுக்கு நேர்மையான மற்றும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாக இந்தியாவின் கொள்கைகள் அமைய வேண்டும்.
கடந்த நான்கு காலாண்டில், உலக பொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் முதலீடுகள் சரிந்த நிலையில், கடந்த 18 மாதத்தில் இந்தியாவில் சர்வதேச முதலீடு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. பருவநிலை மாற்றத்திலிருந்து நமது பூமியை காப்பது, பல தலைமுறையினருக்கான நமது முக்கியமான பணியாகும். 2030க்குள் நமது ஜிடிபியை 33 சதவீதம் என்ற நிலையில் நிறுத்தி மாசுக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆட்சியில் வெளிப்படைத்தன்மை அமைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகளவு முறைகேடு நடந்த சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஊழல், ஆட்சிக்கு நெருக்கமானவர்களுக்கான முதலாளித்துவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மானியங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மானியத்தை ஒழிப்பது நோக்கமல்ல. அதனை முறைப்படுத்தவே விரும்புகிறோம். ஏழைகளுக்கான மானியம் முறைப்படுத்த வேண்டும். 2016ல் மண்ணெண்ணெய் இல்லாத நகரமாக சண்டிகர் மாற்றப்படும். 65 லட்சம் மக்கள் தாங்களாகவே கேஸ் மானியத்தை திருப்பிக்கொடுத்துள்ளனர்.
நமது மக்களும் தொழிலதிபர்களும் அதிகமான பழைய மற்றும் தேவையில்லாத சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது கொள்கைகளை தீவிரமாக ஆராயும்போது, பல மசோதாக்கள் சிறப்பானது நிறைய கண்டறிய முடியும். தேவையில்லாதது கண்டுபிடிக்க முடியாது. கார்பரேட் நிறுவனங்களுக்கான சலுகையால் அரசுக்கு ரூபாய் 62,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.