பாலியல் வழக்கு... சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை விவரங்களை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
Recommended Video
சன்டிகர்: பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனையை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
சுனாரியா சிறை
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு, பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலவரம் வெடித்தது
சாமியார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானாவில் அன்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்டதால் 38 பேர் பலியாகினர். 250 பேர் காயமடைந்தனர்.
ரோட்டக் செல்கிறார் நீதிபதி
சாமியாரின் தண்டனை விவரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு செல்கிறார்.
துணை ராணுவத்தினர் குவிப்பு
சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை வாசிக்கிறார் நீதிபதி. இதனால் சிறை வளாகத்தை சுற்றி 2,300 துணை ராணுவ படையினரும், 9,000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க ஹரியானா, பஞ்சாபில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பஞ்சாப், ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டக்கில் பேருந்து, ரயில் சேவைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ராம் ரஹீமிற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரிகிறது.