144 தடையை மீறி தர்ணா... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
டெல்லி: 144 தடை உத்தரவையும் மீறி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அம்மாநில போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்ணாப் போராட்டத்தில் இறங்கினார் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
144 தடை உத்தரவை மீறி நடைபெறும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என முதலில் கூறிய கெஜ்ரிவால், பின்னர் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் மற்றும் நேர்மையன போலீசாரையும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
குடியரசுதின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் நேரத்தில் டெல்லியின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தை அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.
கெஜ்ரிவாலுடன் அவரது 6 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி 4 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். அரசு பணிகளை பாதித்த தர்ணாவில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் என ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீது நேற்று டெல்லி நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது. ஆனால், அதில் கெஜ்ரிவால் பெயர் சேர்க்கப் படவில்லை என சொல்லப் பட்டது.
இந்நிலையில், 144 தடை உத்தரவையும் மீறி டெல்லி ரயில் பவனில் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் மீது அம்மாநில போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். டெல்லி நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.