மே வங்க தேர்தல்.. திடீர் வன்முறை, துப்பாக்கிச்சூடு.. சிதால்குர்ச்சியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சிதால்குர்ச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி 126இல் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
மேற்கு வங்கத்தில் இன்று காலை நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இன்று அங்கு 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மதியம் ஒரு மணி வரை வங்கத்தில் 52.89 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
அங்கு கூச் பிகார் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி எண் 126இல் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த சிஆர்பிஎப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு காரணமாக சிதால்குர்ச்சி சட்டமன்ற தொகுதியின் வாக்குச் சாவடி 126ல் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கிருந்த சிறப்புப் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ள கூச் பெகர் மாவட்டத்தில் நாளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 91 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.