உள்துறை அமைச்சக அலமாரியில் புதைந்து கிடந்த வரலாற்று சுவாரசியங்கள்!!
டெல்லி: உள்துறை அமைச்சகத்தில் தூசு படிந்த தேவையற்ற கோப்புகளை அழித்துவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது சுவராசியமான வரலாற்று நிகழ்வுகளின் கோப்புகளும் அதிகாரிகளின் கண்களில் தென்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சரகங்களில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி நாடாளுமன்ற வளாக வடக்கு ப்ளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் அலமாரிகளில் உறங்கிக் கொண்டிருந்த கோப்புகளில் தேவையற்றதை அழித்துவிடவும் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அதை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்ற போதுதான் சில சுவாரசிய கோப்புகள் அதிகாரிகள் கண்களில் தென்பட்டிருக்கின்றன.
மவுண்ட்பேட்டனுக்கு டி.ஏ.
நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு நாடு திரும்புவதற்கான பயண செலவுக்காக அப்போது ரூ64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இது இன்றைய மதிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் ஆகும்.
ஓய்வூதியம் மறுத்த ராஜேந்திர பிரசாத்
நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், தமக்கான ஓய்வூதியத்தை ஏற்க மறுத்துவிட்டார். அவரது பணம் அரசாங்க கருவூலத்தில் சேர்க்கபட்டுவிட்டது.
சாஸ்திரியின் சம்பளம்
அதேபோல் முன்னாள் பிரதமர் லால் பக்தூர் சாஸ்திரியும் தமக்கு சம்பளத்தை ஏற்க மறுத்தத்தால் அந்த தொகையும் கூட அரசு கருவூலத்திலேயே சேர்க்கப்பட்டது.
காந்தி மரண அறிவிப்பு
மேலும் மகாத்மா காந்தி அடிகள் படுகொலை செய்யப்பட்டதை முறைப்படி அறிவிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற கேபினட் அமைச்சரவைக் கூட்ட குறிப்புகளும் இப்போது தென்பட்டுள்ளன.