நல்லா அரைச்சு பேஸ்டா பண்ணி வச்சு, யூஸ் பண்ணுங்களேன்... அமைச்சரின் ‘வெங்காய’ சமையல் குறிப்பு
டெல்லி: ஆண்டுதோறும் குளிர்காலங்களில் வெங்காயத்தின் விலையேற்றத்தை சமாளிக்க மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் சிங், அருமையான சமையல் குறிப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
சமீபகாலமாக வெங்காய விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் உரிக்காமலேயே கண்களில் நீரை வரவழைத்து வருகிறது வெங்காயம்.
வெங்காயத்தின் விலையேற்றத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசில் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்சிம்ரத் சிங் பாதல் குடும்பத் தலைவிகளுக்கு ஒரு அருமையான சமையல் குறிப்பை தந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் அமைச்சர் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மழைக்காலங்களில் வெங்காயத்தின் விலையில் ஏற்றம் ஏற்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது.
எனவே, அழுகும்தன்மை கொண்ட வெங்காயத்தை விலை குறைவான நேரத்தில் வாங்கி, அவற்றை காயவைத்து, வதங்கச் செய்து பொடியாகவோ, பசையாகவோ அரைத்துவைத்து, பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். விலையேற்றக் காலத்தில் இந்தப் பொடியையோ, பசையையோ சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரிய அளவில் இதைப்போன்ற வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.