வேன் – கார் மோதி விபத்து: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மகனுடன் பலி
நவான்ஷார்: பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சசி பாலா, மரணம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது மகனும், காரை ஓட்டி வந்த ஹாக்கி வீரரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சசி பாலா, பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் இருந்து தனது மகன் அக்ரிம் தாக்கூர் மகள் வெர்னிகா ஆகியோருடன் சண்டிகாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அட்டார்சிங் என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் பயணம் செய்த கார், நவான்ஷார் மாவட்டத்தில் கம்மம் என்ற கிராமத்தின் அருகே வந்த போது, எதிரே வந்த மினி வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சசி பாலா அவரது 15 வயது மகன் அக்ரிம் தாக்கூர், அட்டார்சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசி பாலாவின் மகள் வெர்னிகா படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேனில் பயணம் செய்த 9 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1987ம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணியில் சசிபாலா இடம் பிடித்தார். 1997ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர். 1990 சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டி, 1998ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் சசிபாலா இடம் பெற்றிருந்தார்.
ஹாக்கியில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியன் ரயில்வே அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பஞ்சாப் அணியின் தேர்வாளராகவும் சசி பாலா பணியாற்றியுள்ளார்.சசிபாலாவின் மறைவுக்கு இந்தியா ஹாக்கி சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.