மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக- சிவசேனா, காங்- பவார் கூட்டணிகள் முறிவால் 4 முனை போட்டி!
மும்பை: தொகுதி பங்கீட்டில் இழுபறி, முதல்வர் பதவி யாருக்கு, யார் பெரிய கட்சி என்ற ஈகோ ஆகியவற்றால் மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்துள்ளன. இதனால் சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15- தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.
இம்மாநிலத்தில் தற்போது ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங். கூட்டணி சார்பில் முதல்வராக காங்கிரஸின் பிருதிவ்ராஜ் சவான் உள்ளார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் உள்ளார். கடந்த 15 ஆண்டுகாலமாக இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்து வருகிறது.
இத்தேர்தலுக்கும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சித்தன. ஆனால் சரிபாகுதி தொகுதிகளையும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையும் தேசியவாத காங்கிரஸ் முன்வைத்ததை காங்கிரஸ் நிராகரிக்க இந்த கூட்டணி உடைந்தது.
இதேபோல் பாஜக-சிவசேனா கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையால் 25 ஆண்டுகால கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் 4-ம் தனித்தனியே களம் காண்பதால் மகாராஷ்டிரா அரசியல் களம் பெரும் பரபரப்பாக இருக்கிறது.