'மைனாரிட்டி' அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் நாட்டுக்குப் பேரழிவே ஏற்படும்- பிரணாப் முகர்ஜி
டெல்லி: எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல், மைனாரிட்டி பலத்துடன் அமையும் கூட்டணி அரசுகளால் நாட்டுக்குப் பேரழிவே ஏற்படும். எனவே வரும் தேர்தலில் மக்கள் நிலைத்த, நீடித்த ஆட்சியை வழங்கக் கூடிய அரசைத் தேர்ந்தெடுப்பதே நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் நல்லது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவின் 65வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார் பிரணாப் முகர்ஜி. அவரது உரையில் கூறியுள்ளதாவது...
மெஜாரிட்டி பலம் இல்லாத அரசு அமைந்தால், உள்நோக்கத்துடன் கூடிய சந்தர்ப்பவாதிகளிடம் அரசு பிணைக் கைதி போல இருக்கும் நிலை ஏற்படும். மிரட்டப்படும் நிலை ஏற்படுகிறது. இது இந்தியாவுக்கு நல்லதல்ல, பேரழிவே ஏற்படும்.
இந்தியாவை கைவிட்டு விடாதீர்கள் என்று நான் இந்திய வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட கூட்டணி ஆட்சிகளால் ஏற்பட்ட வடுக்கள், காயங்களை நீக்கும் ஆண்டாக 2014 இருக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
யார் வென்றாலும் சரி, பெரும்பான்மை பலத்துடன் வெல்லட்டும். நீடித்த, நிலைத்த ஆட்சியை வழங்கட்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் நல்லது, ஆரோக்கியமானது.
தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் மாபெரும் திறமை கொண்டதுதான் நமது நாட்டு ஜனநாயகம். எனவே இப்படிப்பட்ட மக்கள் தீர்ப்பு சாத்தியமே என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
1950ல் இந்தியக் குடியரசு பிறந்தது. 2014ல் அது மறு பிறவியெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமாக இருக்க வேண்டும். அவர்கள் நமது நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் 21வது நூற்றாண்டின் தரத்துக்கேற்ப உயர்த்தப் பாடுபட வேண்டும்.
இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் இந்தியாவை அற்புதமான நாடாக மாற்றிக் காட்டுவார்கள். இப்படிப்பட்ட வாய்ப்புகள், இந்தியாவில் நிலைத்த, நீடித்த அரசு அமைந்தால் மட்டுமே அளிக்கப்பட முடியும் என்றார் பிரணாப் முகர்ஜி.