உபியில் வென்றால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம்- தேர்தல் அறிக்கையில் பாஜக
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. அத்துடன் இலவச லேப்டாப், கேஸ் சிலிண்டர் என பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச லேப்டாப், கேஸ் சிலிண்டர் என வாக்குறுதிகளும் அள்ளி வீசப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் சமாஜவாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் தனியாக களமிறங்குவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ள பாஜக, தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று லக்னோவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பாஜகவின் விஷன் உத்தரபிரதேசம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
•அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்
•மாணவர்களுக்கு 1 ஜிபி இலவச இண்டர்நெட் வசதியுன் இலவச லேப்டாப் அளிக்கப்படும்
•அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் இலவச வைபை வசதி
•விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்
•ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்
•நொய்டா- லக்னோ வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்
•மாட்டிறைச்சி கூடங்கள் தடை செய்யப்படும்
•குரூப் 3, குரூப் 4 பணியிடங்களுக்கு இன்டர்வியூ இன்றி பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் நடைபெறும்.
•மாநிலம் முழுவதும் உள்ள குற்றவாளிகள் 45 நாட்களில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்
•உணவு பதப்படுத்தப்பட்ட பூங்கா நிறுவப்படும்
•24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், விவசாயிகள், ஏழைகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் அளிக்கப்படும்.
•முஸ்லீம் பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும்
• பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு, ஈவ் டீசிங் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்
• கரும்பு விவசாயிகளுக்கு 120 நாட்களுக்குள் நிலுவைத்தொகை வழங்கப்படும்.
• உத்தரபிரதேசத்தில் மாணவர்களுக்கு ரூ. 500 கோடி ஸ்காலர்ஷிப்பிற்காக ஒதுக்கப்படும் என பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக.
- முத்தலாக் முறைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்த லோக்சபா தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. கருத்துக்கணிப்புகளும் பாஜகவிற்கு அதிக அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. எனவே நம்பிக்கையுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது பாஜக.
ஆளும் சமாஜவாதி கட்சியானது, தனது தேர்தல் அறிக்கையில் ஊட்டச் சத்துக் குறைவான குழந்தைகளுக்கு இலவச நெய், கிராமப் பெண்களுக்கு இலவச பிரஷர் குக்கர், இளைஞர்களுக்கு இலவசமாக நவீன செல்போன் போன்ற வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.