அம்பேத்கர், அதானியை முன்வைத்து மோடி- ராகுல் பரஸ்பர தாக்குதல்
காந்திநகர்/லாத்தூர்: பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தொழிலதிபர் அதானியை முன்வைத்து பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.
அம்பேத்கரின் 125வது பிறந்த தினத்தையொட்டி குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மோடி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் பேசியதாவது:
வாழ்நாள் முழுவதையும் தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் பாடுபட்டார். நமது நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அவர் உருவாக்கித் தந்தார். ஆனால் தலித்துகளின் கடவுள் போன்ற அவரை மத்தியில் அமைந்த காங்கிரஸ் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு உரிமைகள் கிடைக்க அம்பேத்கர் வழிவகை செய்தார். அதனை செயல்படுத்த விடாமல் நேரு - காந்தி குடும்பத்தினர் தடுத்தனர். ஆனால் தற்போது அந்த உரிமைகளை வழங்கியது தாங்கள்தான் என்றும், அவர்களின் நலன்களுக்கான சட்டங்களை நிறைவேற்றியது தாங்கள்தான் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்
அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கூட அரசியல் காரணத்துக்காக இந்த விவகாரத்தில் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம் அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கின்றனர்.
அம்பேத்கர் இல்லையென்றால், என்னைப் போன்றவர்கள் யாரும் தற்போது உங்கள் முன்னிலையில் வந்திருக்க முடியாது. இவ்வாறு மோடி பேசினார்.
ராகுல் தாக்கு...
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

குஜராத் மாதிரி அரசு குறித்து மோடி தனது பிரசாரங்களின்போது பேசி வருகிறார். அதனால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரேயொரு தொழிலதிபர்தான் பலனடைந்துள்ளார். விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயனடையவில்லை.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பாஜகவினர், பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்க வேண்டியது குறித்து பேசி வருகின்றனர். அதேசமயம் அக்கட்சி தொண்டர்களோ, ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் சேர்ந்து கொண்டு, மங்களூரில் கேளிக்கை விடுதிக்கு செல்லும் பெண்களை தாக்குகின்றனர். குஜராத் முதல்வர் மோடியோ தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பெண் ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க நடவடிக்கை எடுத்தார். பாஜக ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 20,000 பெண்கள் காணாமல் போய் விட்டனர்.
பாஜகவில் அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். தற்போது புதிதாக ஒருவர் தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் பெயர், நரேந்திர மோடி. அக்கட்சியில் முன்பு, வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இடையே கூட்டணி இருந்தது. தற்போது மோடி மற்றும் தொழிலதிபர் அதானி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
அதானிக்கு, ஒளரங்காபாத் நகரம் அளவுக்கு இருக்கும் 45,000 ஏக்கர் நிலம் வெறும் ரூ.300 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் கொடுத்தால், மிட்டாய் கிடைக்கும். அதுபோல் ஒரு மீட்டர் நிலம், ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம் அனைத்தும், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்குச் சொந்தமானது ஆகும்.
குஜராத் அரசு, நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக ரூ.10,000 கோடி கடன் வழங்கியது. இது, அந்த மாநிலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவிடப்படும் தொகையை விட அதிகமானதாகும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications