கங்கையை சுத்தம் செய்ய ரூ.80 ஆயிரம் கோடி- மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: கங்கையை சுத்தம் செய்ய ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால், அதில் 30 சதவிகிதத்தை மட்டும் மத்திய அரசு வழங்க உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இந்துக்கள் புனிதமாக மதிக்கும், கங்கை நதியில் ஆலை கழிவுகளும், தனிமனிதர்கள் ஏற்படுத்தும் அசுத்தங்களும் இணைந்து நதியை மாசுபடுத்திவருகின்றது.
சுத்தம் செய்ய முடிவு
இதற்காக கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியதாவது: கங்கையை சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன்பாக, அசுத்தம் கலக்காமல் தடுக்கப்படும். கங்கையை சுத்தம் செய்ய சுமார் ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு பங்களிப்பு குறைவு
அரசால் மட்டும் இந்த தொகையை ஒதுக்க முடியாது என்பதால், 30 சதவீத தொகையை மட்டும் மத்திய அரசு அளிக்க உள்ளது. 70 விழுக்காடு எஞ்சிய தொகை, தனியார், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பெறப்படும்.
நதிநீரை சுழற்சி செய்யலாம்
கழிவுகளை பணமாக்கும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதைப்போல கங்கை நீரையும் மறு சுழற்சி செய்து, தொழிற்சாலைகள், விவசாய தேவைகளுக்கு அளிக்க முடியும்.
கப்பல் போக்குவரத்து
வாரணாசி முதல் கூக்ளி வரையில் சிறிய ரக கப்பல்களை இயக்க திட்டமிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளோம். நதியின் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஒரு அணை கட்டவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
கலியுக பகீரதன்
நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, நரேந்திரமோடி தற்கால பகீரதன் என்று வர்ணித்தார். புராணப்படி பகீரதன்தான் கடும் தவம் செய்து கங்கையை பூலோகம் கொண்டுவந்தவர். எனவேதான் கடுமையான முயற்சிகளுக்கு பகீரத பிரயத்தனம் என்று கூறும் வழக்கம் வந்தது குறிப்பிடத்தக்கது.