ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்தோம்.. ஆனால் ஆட்சியைக் கவிழ்க்க அல்ல- வி.கே.சிங்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது ஏன் கிளப்புகிறார்கள்
இதுகுறித்து வி.கே.சிங் கூறுகையில், இந்த நேரத்தில் இந்த விவகாரத்தை ஏன் கிளப்பியுள்ளனர் என்பது எனக்குப் புரியவில்லை. மத்திய அரசு திசை திருப்பும் செயலில் ஈடுபடுவதாகவே நான் கருதுகிறேன்.
சத்பாவனா
ராணுவம் மேற்கொண்ட சத்பாவனாவின் ஒரு பகுதியாகவே இந்த நிதி கொடுக்கப்பட்டது.
பலப்படுத்துவதற்காக
தீவிரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து ஸ்திரப்படுத்தி, பலப்படுத்துவதற்காகவே இந்த நிதி கொடுக்கப்பட்டது. எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டது.
ஒரு கோடியை வைத்து அரசைக் கவிழக்க முடியுமா
அரசைக் கவிழ்க்க ராணுவம் சதி செய்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. புதிராக உள்ளது. ரூ 1 கோடி பணத்தை வைத்து ஒரு அரசைக் கவிழ்ப்பதாக இருந்தால், கவிழ்க்க முடியும் என்றால் நாடு முழுவதும் தினசரி ஒரு அரசு கவிழ்ந்து கொண்டே இருக்கும்.
மோடி கூட்டத்தில் பங்கேற்றதால்
நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ளதா என்றால் அதை நான் மறுக்க மாட்டேன். அதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
அரசியல் எனக்கு வேண்டாம்
ஆனால் நான் அரசியலில் சேர மாட்டேன். அந்த மன நிலையில் நான் இல்லை.
சோனியாவுக்கு எதிராக போட்டியில்லை
2014 லோக்சபா தேர்தலில் நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போட்டியிடப் போவதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லை.
அடிப்படை ஆதாரமற்றது
நான் ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க முயன்றதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி உண்மையற்றது, அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளார் சிங்.