நான் அமித்ஷாவை வளர்த்ததை போல, இளைஞர்கள் பாஜகவில் வளர்க்கபட வேண்டும்: மோடி பேச்சு
டெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதிலிருந்தே அனைவரும் உழைக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாஜகவை பலப்படுத்த அடிப்படை தொண்டர்களிலிருந்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் வரை பாடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு களத்தில் பணியாற்றிய தொண்டர்களே காரணம் என்று கூறிய மோடி, இளைஞர்களை தொடர்ந்து கட்சியிலும், சமூகத்திலும் ஊக்கவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுதான் கட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் என்றும் அவர் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மக்களிடம் பிரசாரம்
எதிர்க்கட்சியினர் பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக கூறிய மோடி, அவ்வாறான தகவல்களால் பாஜக தலைவர்கள் பாதிப்படைய கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவ்வாறான குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடி, அவை பொய் என்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாஜகவும், இளைஞர்களும்
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, பாஜக கட்சி ஆரம்பத்திலிருந்து இளைஞர்களை ஊக்கப்படுத்தியே வளர்ச்சி கண்டதாக கூறினார். தன்னை போன்ற தலைவர்களை வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஊக்கப்படுத்தி வளர்த்ததாகவும் அவர் உணர்ச்சிப்பட தெரிவித்தார்.
இளையவர்களுக்கு பதவி கொடுங்கள்
பாஜகவின் சித்தாந்தத்தை நன்கு உணர்ந்தவன் என்பதால், அமித்ஷாவை தாம் ஆரம்பத்திலிருந்தே ஊக்கப்படுத்தி வளர்த்ததாக கூறிய மோடி, 14 வயது சிறியவரான அமித்ஷாவின் வளர்ச்சியை கண்டு தற்போது வியப்பதாகவும் கூறினார். இதனை பாஜகவினரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கட்சிக்குள்ளும் சமூகத்திலும் இளைஞர்களை கட்சியினர் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களுக்கு வலை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற நிலையில், பாஜகவில் சொல்லுக்கொள்ளும்படியாக இளைய தலைவர்கள் இல்லாததே மோடியின் இந்த பேச்சுக்கு காரணம் என்று கருதப்படுகிறது. பாஜகவில் மோடி, அமித்ஷா போன்ற பிரபலங்கள் மட்டுமே உள்ள நிலையில், இளைஞர்களுக்கு என்று மவுசு கூடும் வகையிலான இளம் தலைவர் இதுவரை உருவாகததே பாஜகவின் மந்த நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.