வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது... டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற டிசம்பர் 15 வரை காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது
டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை குடிநீர், மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
-குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்.
-500, 1000 ரூபாய் நோட்டுக்களை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்
-நள்ளிரவுக்கு மேல் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது
-நள்ளிரவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது நிறுத்தப்படும்
-பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்
-500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யத் தடை இல்லை
-மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில் ரூ2000 வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கட்டணம் செலுத்தலாம்
-பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி 500 ரூபாய் வரை ப்ரீபெய்டு மொபைல்களுக்கு டாப் அப் செய்து கொள்ளலாம்.
-வெளிநாட்டினர் தங்களது நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5000 என்ற அளவில் தங்களது பாஸ்போர்ட்டுகளை காண்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
-பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி டிசம்பர் 3 முதல் டிசம்பர் 15 வரை சுங்க கட்டணம் செலுத்தலாம்
-கூட்டுறவு அங்காடிகளில் ஒரே நேரத்தில் மட்டும் ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்
-டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.