கொந்தளிக்கும் குஜராத் வாக்காளர்களின் பெரும் கோபத்தை குறைக்க அரங்கேறும் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடகம்!
கொந்தளிக்கும் குஜராத் வாக்காளர்களின் பெரும் கோபத்தை குறைக்கவே ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது மத்திய அரசு.
Recommended Video
அகமதாபாத்: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் குஜராத் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் பாஜக மீது தணியாத பெருங் கோபத்தில் உள்ளனர். இதனைத் தணிக்கும் வகையில்தான் தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
ஒரே நாடு ஒரே வரிவிதிப்பு என மிகப் பெரிய முழக்கத்துடன் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு நாடு முழுவதும் வரலாறு காணாத எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குஜராத்தில் பாஜகவின் மிகப் பெரும் வாக்கு வங்கியாக இருந்த சூரத் மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வீதிகளின் திரண்டு வரலாறு காணாத 'மெரினா' புரட்சியை நடத்தினர். ஆனால் குஜராத்தில் ஆளும் அரசு இந்த போராட்டத்தின் குரலை வெளி உலகுக்கு தெரியவிடாமல் அடக்கியது.
தேர்தலுக்கே யோசனை
ஏற்கனவே குஜராத்தில் பாஜகவின் வாக்கு வங்கியான பட்டேல் சமூகம் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டது. தலித்துகளும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனால் குஜராத் சட்டசபை தேர்தலை நடத்தவே ரொம்பவே யோசித்தது பாஜக.
கருத்து திணிப்பு
என்னதான் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கருத்து கணிப்புகளும் பாஜகவே வெல்லும் என திணித்து கொண்டிருந்தாலும் களநிலவரம் அந்த கட்சிக்கு சாதகமே இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் வாக்காளர்களின் கோபத்தைத் தவிர்க்க வேறு வழியே இல்லாமல் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக ஆலோசிக்க வேண்டிய நிலைமை0க்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.
ஜிஎஸ்டி கூட்டம்
அஸ்ஸாமின் குவஹாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளை களைய எதிர்க்கட்சிகள், வல்லுநர்கள் தெரிவித்த யோசனைகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கிய குஜராத் சட்டசபை தேர்தலுக்கு நன்றி என பதிவிட்டும் இருக்கிறார்.
குஜராத் தேர்தலுக்காக
தற்போது அதிரடியாக 173 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் கொந்தளித்து போய் கிடக்கும் குஜராத் வாக்காளர்களை சமாதானப்படுத்தும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.