குஜராத் சட்டசபை தேர்தல் : ஆறு வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் வாக்குப்பதிவு
அகமதாபாத் : குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகள் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. குஜராத் மாநிலத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜ.க.,வும், எப்படியாவது இந்த முறை குஜராத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துவிட வேண்டுமென காங்கிரஸும் தீவிரமாக களத்தில் வேலை பார்த்து உள்ளன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதனால் குஜராத் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டது.
இதுகுறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி சுவான் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு தொழிற்நுட்ப கோளாறுகளால் வட்காம், விராம்கம் தொகுதியில் தலா இரண்டு வாக்குச்சாவடிகளிலும், தஷ்க்ரோய் மற்றும் சவிலி தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவித்து இருந்தார்.
மேலும், நாளை நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையில் விசாக் நகர், மொடாசா உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்காளர் ஒப்புகைச்சீட்டோடு பொருத்தி பார்க்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
இதையடுத்து இன்று குறிப்பிட்ட ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.