குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கொடுத்த பட்டேல்கள், விவசாயிகள் நிறைந்த சவுராஷ்டிரா!
குஜராத் சட்டசபை தேர்தலி பாஜகவுக்கு சவுராஷ்டிரா பகுதி மரண அடி கொடுத்திருக்கிறது.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஆட்சியை போராடி தக்க வைத்துக் கொண்ட பாஜகவால் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் வாங்கிய மரண அடியை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.
குஜராத்தின் சவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் மொத்தம் 54 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2012 தேர்தலில் இந்த 54-ல் 36தொகுதிகளை பாஜக அள்ளியது. காங்கிரஸுக்கு 13 தொகுதிகள்தான் கிடைத்தன.
ஆனால் இந்த தேர்தலில் குஜராத்துக்கு சவுராஷ்டிரா பிராந்தியம் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சவுராஷ்டிரா-கட்ச் பட்டேல்கள் சமூகத்தினரும் விவசாயிகளும் நிறைந்த பகுதி. இடஒதுக்கீடு கேட்டு பட்டேல்கள் நடத்திய கிளர்ச்சி இங்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
விவசாயம் பிரதானம்
அத்துடன் பட்டேல்கள் சமூகத்தின் உட்பிரிவுகளையும் ஹர்திக் பட்டேல் லாவகமாக ஒருங்கிணைத்திருந்தார். பருத்தி மற்றும் நிலக்கடலைதான் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் பிரதான விவசாயம்.
தேர்தல் அறிவிப்புகள்
இந்த விவசாயிகள் ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இவர்களது அதிருப்தியை போக்க தேர்தல் நேரத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தது பாஜக அரசு. ஆனால் தேர்தலுக்கான நாடகம்தான் இது என்பதை விவசாயிகள் நன்றாகவே புரிந்து கொண்டனர்.
பரிதாப பாஜக
இதன்விளைவாகத்தான் சவுராஷ்டிரா- கட்ச் பிராந்தியத்தில் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை படுவேகமாக சுழன்றடித்தது. இதன் விளைவாக தற்போதைய தேர்தலில் வெறும் 23 இடங்களில்தான் பாஜக வெல்ல முடிந்தது. இப்பகுதியில் கடந்த முறை வென்ற 13 தொகுதிகளை இழந்திருக்கிறது பாஜக. அதாவது சவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் பாஜக 23; காங்கிரஸ் 30 தொகுதிகளை இம்முறை கைப்பற்றி உள்ளது.
குறைவான இடங்கள்
சவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் வாங்கி மரண அடியால்தான் பாஜக ஆட்சி அமைக்க தேவையான 92 இடங்களைப் பெறுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இப்போது வெறும் 99 இடங்களுடன் ஆட்சி கட்டிடலில் தலைகுனிவோடு அமர வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.