'வாரிசு'.. குஜராத் தேர்தலில் கும்மியடிக்கும் பாஜகவின் "குடும்ப" அரசியல்.. அந்தர் பல்டி அடித்த தாமரை!
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி தற்போதைய மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களின் பிள்ளைகளுக்கு சீட் கொடுத்து வருவது பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, தேசிய அளவிலும், மாநிலங்களிலும் குடும்ப அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாஜகவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குஜராத் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தாங்களே குடும்ப அரசியலை ஊக்குவித்துவிட்டு, பிற கட்சிகள் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

பற்றி எரியும் குஜராத் தேர்தல் களம்..
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க குஜராத் தேர்தல் களம் பற்றி எரிகிறது என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் பாஜகவும், காங்கிரஸும் தான் மோதி விளையாடப் போகிறது என எதிர்பார்த்திருந்த குஜராத் தேர்தல் களத்தில், வீறுகொண்ட வேங்கையாக குதித்திருக்கிறது அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. முதலில், பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஆம் ஆத்மி, தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆளும் பாஜகவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இதனால் குஜராத்தின் ஆட்சி அரியணையை கைப்பற்ற கடுமையான மும்முனை போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

பீதியில் உறைந்திருக்கும் பாஜக..
குஜராத்தை பொறுத்தவரை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அசைக்கவே முடியாது என்ற நிலைதான் இத்தனை ஆண்டுகளாக காணப்பட்டன. ஆனால், தற்போதைய தேர்தல் அந்த மாதிரியாக இல்லை. 20 ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் அதன் மீது மக்களுக்கு இயல்பாகவே ஒரு அதிருப்தியும், வெறுப்பும் இருக்கவே செய்யும். இந்த குஜராத்த தேர்தலில் பாஜக மீது அத்தகைய அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மோர்பி பால விபத்தானது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல பாஜக மீது மக்களுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, மக்களின் இந்த மனநிலையை தங்களுக்கு சாதகமாக ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றன. இதனால், ஒருவேளை குஜராத் தேர்தலில் நாம் தோற்றுவிடுமோ என்கிற பயம் பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ளது.

தோல்வி பயமும், குடும்ப அரசியலும்..
குஜராத் சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், எக்காரணம் கொண்டும் இந்த தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளது. ஒரு சிறு அலட்சியம் கூட, ஆட்சி அரியணை பறிபோக காரணமாக மாறிவிடலாம் என தெரிந்துகொண்ட பாஜக, இதுநாள் வரை தான் கண்டிப்புடன் பின்பற்றி வந்த கட்சி தேர்தல் விதிகளை கூட சமரசம் செய்ய தொடங்கிவிட்டது. உதாரணமாக, தேர்தலில் ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட் தான் கொடுக்கப்படும் என்ற விதிமுறையை பாஜக பல ஆண்டுகளாக பின்பற்றி வந்தது. ஆனால், கட்சிக்காரர்களின் எதிர்ப்பு, ஜாதி அரசியல் ஆகியவற்றின் காரணமாக இந்த விதியை பாஜக தளர்த்தி இருக்கிறது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு அங்கு தற்போது பாஜக சீட் கொடுத்து வருகிறது.

வாரிசுகளுக்கு சீட் - கடும் விமர்சனம்..
இதேபோல, குஜராத் தேர்தலுக்காக தற்போதைய எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் வாரிசுகளுக்கும் பாஜக சீட் தந்து வருகிறது. தேசிய அளவில் காங்கிரஸையும், மாநில அளவில் சமாஜ்வாதி, டிஆர்எஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளையும் குடும்ப அரசியல் செய்வதாக கடுமையாக குற்றம்சாட்டி வந்த பாஜக, தற்போது குஜராத் தேர்தலுக்கு 7 இந்நாள் - முன்னாள் எம்எம்ஏக்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸும் தனது பங்குக்கு 13 எம்எல்ஏக்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை, இவ்வாறு அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பது புதிது இல்லை. ஆனால், குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறும் பாஜக, இப்படி செய்வது குஜராத் மக்கள் மத்தியில் அக்கட்சியின் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications