உத்தர்கண்ட் விவகாரம்: மீண்டும் முதல்வராகிறார் ஹரீஷ் ராவத்!
டேராடூன்: செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் 33 வாக்குகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அவர் உத்தர்கண்ட் முதல்வராகிறார்.
இந்தத் தகவலை நேற்று மாலை கட்சித் தொண்டர்களுக்குத் தெரிவித்த ஹரீஷ் ராவத், 'நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக உறுதியாக நம்பப்படும் நிலையில், அரசியல் மோதல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்றார்.
உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அவர்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார்.
இதற்கிடையே, ஹரீஷ் ராவத் அரசைக் கலைத்துவிட்டு உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், இதனை ரத்து செய்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால் உத்தரகண்டில் குடியரசுத்
தலைவர் ஆட்சி தொடர்ந்தது.
ஆனால் ஹரீஷ் ராவத்தின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான வாக்குகளும், பேரவை நடவடிக்கைகளின் விடியோ காட்சிகளும் சீல் வைக்கப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது. அதனை நீதிபதிகள் ஆய்வு செய்த பிறகு, வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற 61 எம்எல்ஏக்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுவதால், ஹரீஷ் ராவத் வெற்றி பெறக் கூடும் என உறுதியாக நம்பப்படுகிறது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு உடனடியாக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அவர் நிர்வாகிகளிடையே பேசினார்.
அப்போது, தமக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "நான் ஒரு சிறிய மாநிலத்தின் முதல்வர் என்பதை எப்போதும் கூறி வந்துள்ளேன். வறுமைக்கு எதிராகவும், மக்களின் பின்தங்கிய நிலைக்கு எதிராகவும் போராடுவதே எனது பணி.
இந்தச் சூழலில், அரசியல் மோதல் போக்கை கைவிட மத்திய அரசு முன்வர வேண்டும். வளர்ச்சியை நோக்கி உத்தரகண்ட் மாநிலத்தைக் கட்டமைப்பதில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்," என்றார்.