பிரசவத்திற்குப் பிறகு ஐசியுவுக்கு மாற்றப்பட்ட போலீஸ்காரரின் மனைவி பலாத்காரம்!
சன்டிகர்: ஹரியானாவில் குழந்தையை பிரசவித்த பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் மனைவி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பகதூர்காரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை இரவு 3.30 மணிக்கு ஒருவர் வெர்னா காரில் மருத்துவமனைக்கு வந்தார்.
காரில் இருந்து இறங்கிய அவர் நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு இருந்த போலீஸ்காரரின் மனைவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். அந்த நபரின் உருவம் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது என்று அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த மர்ம நபர் வந்து பலாத்காரம் செய்துவிட்டு செல்லும் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கூட இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.