'தயவு செய்து நீதி வாங்கிக் கொடுங்க'.. கைக்கூப்பி மன்றாடிய பெண் - ஆக்ஷனில் உ.பி. போலீஸ்
ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்கான நீதியை வேண்டி கெஞ்சும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டு, பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நேற்று (மார்ச்.1) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் திங்கட்கிழமை கோயிலுக்கு சென்றிருந்த போது, அங்கு கௌரவ் ஷர்மாவின் மனைவியும், மாமியாரும் வந்துள்ளனர். அப்போதே இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. தகவல் அறிந்து, கௌரவ் ஷர்மா உடனே கோயிலுக்கு வந்துள்ளார்" என்று கூறியுள்ளனர்.
பிறகு நடந்த சம்பவத்தை விளக்கிய அப்பெண், கோவிலிலேயே வைத்து என் தந்தையின் மார்பிலும், பின் பக்கத்திலும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்று கூறியுள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அப்பெண்ணின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே வந்த அப்பெண், அங்கு குழுமியிருந்தவர்கள் நடுவே நின்று, கண்களில் நீருடன், இரு கைகளையும் கூப்பி, "தயவு செய்து எனக்கு நீதி வாங்கிக் கொடுங்கள்.. எனக்கு நீதி வேண்டும். முதலில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவன், இப்போது என் தந்தையையும் கொன்றுவிட்டான்" என்று மன்றாடினார்.
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக உ.பி. போலீஸ் ஒரு நபரை கைது செய்துள்ளது. இதர குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.