இந்தியாவின் 'ஹவாலா' தலைநகராக கேரளா உருவானது எப்படி?
கடவுளின் சொந்த தேசம் என்ற பெருமைக்குரிய கேரளாதான் இந்தியாவிலேயே 'ஹவாலா' பணம் அதிகம் புழங்குகிற மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் பகுதியில் ஹவாலா பணம் என்றால் என்ன? அவர்களது 'பாஸ்வேர்டுகள்" என்ன? எனப் பார்த்தோம்.
இந்த 2வது பகுதியில் கேரளா எப்படியெல்லாம் ஹவாலா தலைநகராக உருவெடுத்தது? ஹவாலாவின் பிடியில் கேரளா சிக்கிய கதை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரளாவில் ஆண்டுக்கு ரூ23 ஆயிரம் கோடி ஹவாலா பணம்
நமது ஒன் இந்தியா தளத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் குறிப்பிட்ட தகவலின்படி ஆண்டுக்கு ரூ23 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பல தீவிரவாத இயக்கங்கள் முகாம் அமைத்திருக்கும் வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால்தான் கேரளா இத்தகைய ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையிலானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு ஹவாலா முறையைப் பயன்படுத்திதான் பணத்தை அனுப்பியும் வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதல்களுக்கு நிதி
இதில் கவலைக்குரிய செய்தி என்னவெனில் இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்களுக்கான நிதி உதவியின் மையமாக கேரளாவே இருந்திருக்கிறது என்பதுதான்.. டெல்லி, பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு கிடைத்த நிதி உதவியே 'கேரளா'வை மையமாகக் கொண்ட ஹவாலா நெட்வொர்க்தான் என்கிறது தேசிய புலனாய்வு அமைப்பு. வளைகுடா நாடுகளில் இருந்து உறவினர்களுக்கு கேரளா மாநிலத்தவர் ஹவாலா முறையைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதை தீவிரவாதிகளும் பின்பற்றி வருகின்றனர் என்பதுதாம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகாலமாக ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு கேரளாவே தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹவாலா பணத்தில் எது தீவிரவாதிகளுக்கு போகிறது? எது தீவிரவாதிகளுடன் தொடர்பில்லாதவர்களுக்குப் போகிறது? என்பதை கண்டுபிடிப்பதில் நீண்டகாலமாகவே குழப்பம் இருந்து வருகிறது.

ஹவாலாவாலாக்கள் நிறைந்த கேரளா
இந்தியாவில் கேரளா, டெல்லியில்தான் அதிக எண்ணிக்கையில் ஹவாலாவாலாக்கள் இருக்கின்றனர். புலனாய்வு அமைப்புகளின் தகவல்படி கேரளாவில் சுமார் 400 ஹவாலாவாலாக்கள் இருக்கின்றனர். டெல்லியில் மொத்தம் 280 ஹவாலாவாலாக்கள் நடமாடுகின்றனர். பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கேரளாவில் பெரும் எண்ணிக்கையிலான ஹவாலாவாலாக்கள் இயங்கி வருகின்றனர்.

அரசியல்வாதிகள் தொடர்பு
கேரளா மாநில அரசு ஹவாலாவாலாக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ஒருபுறம் எனில் மறுபுறம் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்போரை கண்டும் காணாமலும் விட்டு விடுகிறது. ஹவாலா பணத்தில் பெரும்பகுதி அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகவும் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளுக்கு 'ஆக்ஸிஜனாக' ஹவாலா
கேரளா போலீசாருக்கு புலனாய்வுத் துறை அனுப்பியிருக்கும் அறிக்கையில் தீவிரவாத குழுக்கள் இந்த ஹவாலா பணத்தை வைத்தே இயங்குகின்றன என்று எச்சரித்திருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் கேரளா சிறைகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 2000 தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஹவாலா வழியே பணத்தை அனுப்புவது தொடர்பானவைதான்.
கடந்த 2002ஆம் ஆண்டு கேரளாவில் ஹவாலா பணப்பரிமாற்றம் ரூ703 கோடி எனில் 2013 ஆம் ஆண்டு இது 20 மடங்கு அதிகரித்திருப்பது கவலைக்குரியது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே இலக்கு
கேரளாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இலக்கு வைத்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் இந்த இளைஞர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் இளைஞருக்கு ஒருநாளைக்கு ரூ2,000 முதல் ரூ2,500 வரை வருவாய் கிடைக்கிறது. 'ஹவாலா' வழியில் பணம் மட்டுமல்ல பெருமளவு தங்கம் மற்றும் வெள்ளியும் கடத்தப்படுகிறது.

எந்த பகுதிகள்?
வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரி ஒருவர் இது குறித்து ஒன் இந்தியாவுக்கு கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த நெட்வொர்க் மிகவும் வலுவடைந்திருக்கிறது என்கிறார். குறிப்பாக கேரளாவின் கண்ணூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகியவற்றில்தான் இந்த நெட்வொர்க் மிக வலுவாக இருக்கிறது என்கிறார்.

மதத்தின் பெயரால்...
ஹவாலா பணப் பரிமாற்றம் 60% அளவுக்கு மதத்தின் பெயரால் நடைபெறுகிறது. இப்படி செய்வதின் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து எந்த சிக்கலும் இன்றி பணம் வெளியேறி விடுகிறது. மதத்தின் பெயரிலான அறக்கட்டளைகள் அல்லது மதம் சார்ந்ந்த நடவடிக்கைகளுக்கு பணம் அனுப்புகிறோம் என்ற போர்வையில் ஹவாலா பணப் பரிமாற்றம் நிகழ்கிறது. இப்படி மதத்தின் பெயரால் பணப் பரிமாற்றம் நிகழ்வதால் உள்ளூர் போலீசாரும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றனர்.

ஹவாலா தங்கம்..
டிராவல் ஏஜெண்டுகள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் ஹவாலா வழியே தங்கக் கடத்தலில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு நகைக் கடை உரிமையாளர்களும் தங்க ஆபரணங்களை செய்வோரும் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றனர். ஹவாலா வழியே தங்கத்தைப் பெறுவதன் மூலமாக அரசுக்கு எந்த ஒரு வரியையும் செலுத்த வேண்டியதில்லையே என்பதுதான் நகைக் கடை உரிமையாளர்களின் எண்ணம். அதுவும் திருமண காலங்களில்தான் 70% அளவு தங்க பரிமாற்றம் நடைபெறுகிறதாம்.












Click it and Unblock the Notifications