சபரிக்கு நிகரான மலையுமில்லை... ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்
சபரிமலை: கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே சபரிமலையில் மட்டுமல்ல அனைத்து கோவில்களிலும் சரணகோஷத்தை கேட்கலாம். 41 நாட்கள் மண்டலபூஜையை ஒட்டி கார்த்திகை மாதம் 1ஆம் தேதி மாலை அணிந்து அது முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு செல்வார்கள்.
சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருவதால் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால் சபரிமலை சன்னிதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வெள்ளிக்கிழமை இரவு முதலே சபரிமலையில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.இதனால் பம்பை ரோட்டில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் நிலைக்கல் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன.

ஆன்லைனின் முன்பதிவு
தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் பம்பை, அப்பாச்சிமேடு, சரங்குத்தி ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறிய சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு வரும் பக்தர்களும் நேற்று 3 மணி நேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கட்டுக்கடங்காத கூட்டம்
விடுமுறை தினமான இன்றும் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. அதிகாலை நடை திறந்த போது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் பகுதி வரை நீண்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சன்னி தானம் வந்த பக்தர்களால் மாலை 4 மணிக்கு பிறகே தரிசனம் செய்யதனர்.

அலங்கார பிரியன்
மண்டலபூஜையை ஒட்டி ஐயப்பன் சன்னிதானத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஐயப்பன் அலங்கார பிரியர். அவருக்கு வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலை தொடுக்கின்றனர் சேவகர்கள்.

பதினெட்டாம் படி
தலையில் இருமுடி ஏந்தி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக, காடு மேடு கடந்து ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர் பக்தர்கள். சன்னிதானத்தில் உள்ள பதினெட்டாம் படியை அடைந்து விட்டாலே போது அவர்களின் பூர்வ ஜென்ம பலனை அடைந்து விட்டதாக மகிழ்கின்றனர்.

நெய் அபிஷேக பிரியன்
சபரிமலைக்கு சென்றதும் இருமுடிகட்டைப் பிரித்து அதிலிருக்கும் நெய்தேங்காயை எடுத்துக்கொண்டு கோயிலின் அருகில் இருக்கும் பஸ்மகுளத்தில் நீராட வேண்டும். பின்பு நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய்ஊற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். நெய் அபிஷேகம் நடத்திய பிறகு ஐயப்ப சுவாமிக்கும், நெய்த்தேங்காயின் ஒரு பகுதியை கன்னிமேல் மகா கணபதி கோயில் நடையிலிருக்கும் ஹோமத்தில் இட்டு விநாயகரை வழிபடுவார்கள்.

ஆழித்தீயில் நெய் தேங்காய்
பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் கொளுந்துவிட்டு எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். ஆனால் இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னி மூல கணபதிக்கு உரியதாம்.

குழந்தை சாமிகள்
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்ல குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்புகின்றனர். ஒருமுறை சென்று வந்தால் மீண்டும் மீண்டும் ஐயப்பன் அழைப்பார் என்பது நம்பிக்கை.

இதே ஒரு குட்டிசாமி
தன் தலையில் இருமுடி சுமந்து செல்லும் குட்டி சாமிக்கு ஆலோசனைகள் சொல்கிறார் அனுபவம் மிக்க ஒரு சாமி.

ஆக்ஸிஜன் நிலையங்கள்
சபரியில் கடினமான மலைப்பாதையில் யாத்திரை மேற்கொள்ளும் வயதான பக்தர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் 14 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலிமலை, கரிமலை
செங்குத்தான மலைப்பாதையில் ஏறும்போது சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. எனவே, கரிமலை, நீலிமலை போன்ற மலைப்பாதையில் முக்கியமான இடங்களில் இந்த ஆக்சிஜன் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவாம்.

இதயநோய் மையம்
பக்தர்களின் நலனுக்காக நீலிமலை உச்சியில் தற்காலிக இதயநோய் மையமும், பம்பையில் ரத்தக்குழாய் சிகிச்சை மையமும் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரவணை பிரசாதம்
சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதங்களில் ஒன்றான அரவணை தயாரிக்க சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், சுக்கு போன்ற பொருட்கள் அவசியம். இம்முறை இருப்பு வைக்கப்பட்டிருந்த கற்கண்டு தீர்ந்து விட்ட நிலையில் அரவணை உற்பத்தி கடந்த 24-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.

25 லட்சம் டின் தயார்
தேவசம்போர்டு அதிகாரிகள் நேரடியாக கடைகளில் கற்கண்டு விலைக்கு வாங்கி பம்பை கொண்டு வரப்பட்டது. அவை டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு நேற்று இரவு மீண்டும் அரவணை உற்பத்தி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே 25 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்படவில்லையாம்.

பாதுகாப்பு பணியில்
சபரிமலையில் 12 நாட்களுக்கு ஒருமுறை போலீசார் மாற்றப்படுவார்கள். இதனால் கடந்த 16ம் தேதி பொறுப்பேற்ற போலீசாருக்கு பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து புதிய போலீசார் 28ஆம் தேதி முதல் பொறுப்பேற்றுள்ளனர். இதன்படி சன்னிதானத்தில் ஒரு எஸ்பி தலைமையில் 850க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கமாண்டோ வீரர்கள்
பம்பையில் ஒரு எஸ்பி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தவிர சன்னிதானத்தில் 175 போலீசாரும், பம்பையில் 60 போலீசாரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் தவிர தலா ஒரு கம்பெனி அதிவேக அதிரடிப்படை போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுவாமியே சரணம் ஐயப்பா!
சபரிக்கு சென்று சரணகோஷம் முழங்க ஐயப்பனை கண்குளிர தரிசித்த பின்னரும் ஊர்திரும்ப சில பக்தர்களுக்கு மனமிருக்காது. மீண்டும் மீண்டும் தரிசிக்க செல்வார்கள். ஐயப்பனை கண்டாலே போதும் வேறு எதுவுமே அவர்களுக்கு தேவையிருக்காது.மண்டல பூஜை, மகரஜோதி காலம் முடியும் வரைக்கும் இனி சபரிமலை எங்கும் சுவாமியே சரணம் ஐயப்பா! என்ற முழக்கம்தான் எதிரொலிக்கும்!












Click it and Unblock the Notifications