‛ஆப்பிள்’ பழத்தால் ஆட்சியை இழந்த பாஜக.. 30 ஆண்டில் தாமரைக்கு 2வது ஷாக்.. இமாச்சலில் நடந்தது இதுதான்!
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ள பாஜக தனது ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இழந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக ‛ஆப்பிள்' பழம் உள்ளது என்பதும், கடந்த 1993ல் நடந்ததுபோல் மீண்டும் காங்கிரஸிடம், பாஜக ஆட்சியை இழந்ததும் தெரியவந்துள்ளது.
இமாச்சல பிரதேசம்.. குளிர் நிறைந்த மாநிலமாகவும், கோடைவாழ் தலமாகவும் அறியப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசம் மிகவும் அமைதியான மாநிலமாகவும், அதே நேரத்தில் அழகிய மாநிலமாகவும் உள்ளது.
இதுமட்டுமின்றி இமாச்சல பிரதேசம் மிகவும் சிறிய மாநிலமாகும். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 ஆக தான் உள்ளது. இங்கு மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?பாஜக, காங்கிரஸில் கவனம் பெறும் 5 தொகுதிகள்! நிலவரம் என்ன?
இமாச்சல பிரதேச தேர்தல்
கடந்த 2017ல் நடந்த சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை வெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவனது. இந்த ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி
இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ரிசல்ட் முழுவதுமாக வெளியான நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஆம்ஆத்மி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை. இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உள்ளது.
மாறாத ‛டிரெண்ட்’
இமாச்சல பிரதேசம் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானபோது அது பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தோற்கும் எனவும், பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் எனவும் கூறியது. ஆனால் மாநிலத்தில் கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்கள் பாஜக, காங்கிரஸ் என மாற்றி மாற்றி தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அந்த டிரெண்டை பாஜக உடைத்து சாதிக்கும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் கருத்து கணிப்புகளை மக்கள் பொய்யாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை அம்மாநில மக்கள் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் இமாச்சலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க உள்ளது.
திரும்பிய வரலாறு
இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. இமாச்சல் பிரதேசம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமாகும். இதனால் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது பற்றி அக்கட்சியினர் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 1990ல் நடந்த சம்பவத்தால் 1993 தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டு போல் தற்போதும் பாஜக தோல்வியடைந்துள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு பின்னணியில் ‛ஆப்பிள்' பழம் இருப்பதும், தற்போது அந்த வரலாறு திரும்பி மீண்டும் பாஜகவை வீழ்த்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
20 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயம்
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஆப்பிள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. மாநிலத்துக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் ரூ.5 ஆயிரம் கோடி அல்லது 13.5 சதவீதம் ஆப்பிள் பழம் மூலமாக கிடைத்து வருகிறது. மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகளில் பிரதான தொழிலாக ஆப்பிள் விவசாயம் உள்ளது. அதன்படி சிம்லா மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், மாண்டி, குல்லு மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள தலா 4 தொகுதிகள், கின்னாபூர், லாஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதிகளில் ஆப்பிள் விவசாயம் முக்கியமானதாக உள்ளது. மேலும் பல தொகுதிகளில் ஆப்பிள் விற்பனையாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆப்பிள் விவசாயிகள் வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.
30 ஆண்டுக்கு முந்தைய போராட்டம்
இதனால் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் சரி ஆப்பிள் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த 32 ஆண்டுகளாக நடந்து கொண்டது இல்லை. மேலும் ஆப்பிள் விவசாயிகளின் விஷயத்தில் அரசியல் கட்சிகள் மிகவும் கவனமாக நடந்து கொள்வார்கள். இதற்கு பின்னணியில் ஒரு துயர சம்பவம் உள்ளது. கடந்த 1990 காலக்கட்டத்தில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. சாந்தகுமார் என்பவர் முதலமைச்சராக இருந்தார். இந்த வேளையில் காலநிலை மாற்றத்தால் ஆப்பிள் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் வழங்கப்பட்ட மானியங்கள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் ஆப்பிள் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து அதிகமாக பாதிக்கப்பட்டனர். மேலும் ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கூறி 1990 ஜூலை 22ல் கோத்கார்க் பகுதியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில் கோவிந்த் சிங், தாரா சந்த், ஹிரா சிங் ஆகியோர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதுஒருபுறம் இருக்க அரசு ஊழியர்களும் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். கொந்தளிப்பான சூழலால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
படுதோல்வி கண்ட பாஜக
இருப்பினும் ஆப்பிள் விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆறாத வடுவாக இருந்தது. இதையடுத்து 1993ல் இமாச்சல பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. முதலமைச்சராக இருந்த சாந்த குமார் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரபத்ர சிங் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் மண்டி இன்டர்வென்சன்(எம்ஐஎஸ்) திட்டத்தை தொடங்கி ஆப்பிள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை நடைமுறைப்படுத்தினார். 1993 தேர்தலில் பாஜக வீழ்ந்ததற்கு ஆப்பிள் விவசாயிகள் தான் காரணம் என அப்போது அதிகமாக பேசப்பட்டது.
மீண்டும் வெடித்த போராட்டம்
இந்த தேர்தலில் இருந்து தான் காங்கிரஸ், பாஜக கட்சியினர் ஆப்பிள் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது இல்லை. மேலும் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அதனை முடிந்தவரை நிறைவற்றி வருகின்றனர். இந்நிலையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்பிள் விவசாயிகள் சமீபத்தில் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதாவது அட்டை பெட்டிகளில் வைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆப்பிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்ஐஎஸ்ஸில் வழங்கிய ஆப்பிளுக்கான நிலுவை தொகை வழங்கப்படதும் பெரிய பிரச்சனையாக இருந்தது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் பிரதானமாக செயல்படும் அதானி குழுமத்தின் ‛அதானி அக்ரி பிரெஷ்' நிறுவனம் ஆப்பிள் விவசாயிகளிடம் வழங்கிய வாக்குறுதிகள் படி கொள்முதல் செய்யவில்லை. குறைந்த விலைக்கு ஆப்பிளை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து தான் ஆப்பிள் விவசாயிகள் வீதிகளில் இறங்கி மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வென்றது எப்படி?
இந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சி சாதகமாக பயன்படுத்த முயன்றது. இதனால் காங்கிரஸ் சார்பில் ஆப்பிள் விவசாயிகளை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுதொடார்பாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ‛‛மாநிலத்தில் ஆப்பிள் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட தோட்டக்கலை ஆணையம் அமைக்கப்படும். இதன் பரிந்துரையின் அடிப்படையில் ஒவ்வொரு வகை ஆப்பிளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும். மேலும் அதானியின் நிறுவனமாக இருந்தாலும் கூட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் ஆப்பிளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்'' என கூறியது. மேலும் தேர்தல் பிரசார வேளையிலும் ஆப்பிளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கும் என தலைவர்கள் பேசினார். இதனை நம்பிய ஆப்பிள் விவசாயிகள், ஆப்பிள் சார்ந்த தொழில் செய்வர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
கைக்கொடுக்காத ஜிஎஸ்டி குறைப்பு
முன்னதாக மாநிலத்தில் ஆப்பிள் விவசாயிகளின் போராட்டம் பாஜகவுக்கு பாதகமாக அமையும் என்பதை பாஜகவும் உணர்ந்து இருந்தது. இதனால் தான் சுதாரித்து கொண்ட பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஆப்பிள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவித்தது. மேலும் முதல்வராக இருந்த ஜெய்ராம் தாகூரும் கூட பல பிரசார கூட்டங்களில் ஆப்பிள் விவசாயிகளின் குறைகளை முன்வைத்து பேசினார். அப்போது, ‛‛மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலத்தில் ஆப்பிள் விவசாயிகளி்ன நலனை காக்க எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. ஆப்பிள் கொள்முதலுக்கான நிலுவை தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2017 முதல் 2 முறை ஆப்பிளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது'' என்றார். இருப்பினும் பாஜகவின் இந்த அறிவிப்புகளை வாக்காளர்கள் நம்பவில்லை. இதனால் தான் இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்வி கண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.