முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்... பாலைவனத்தை சோலைவனமாக்கிய கிஷன் ஓர் உதாரணம்!
ஜெய்ப்பூர்: எதற்குமே பயன்படாத நிலம் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு இடத்தில் சோலைவனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் பிரதீப் கிஷன் மற்றும் அவரது அணியினர். புல் பூண்டு கூட இல்லாத அந்த இடம் இன்று மலர்ச் செடிகளாலும், அழகிய மரங்களாலும் பூத்துக் குலுங்கி புஷ்பவனமாக காட்சி தருகிறது.
ராஜஸ்தானில் உள்ள மெஹர்ந்கர் மலையின் அடிவாரத்தில்தான் இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாறைகள் நிறைந்த பாலைவனப்பகுதியான அது தற்போது பசுமை கொஞ்சுமிடமாக மாறி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
ராஜாவின் வேண்டுகோள்...
திரைப்பட இயக்குநரும், சமூக சேவகருமான பிரதீப் கிஷன் தான் இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். இவரிடம் கடந்த 2006ம் ஆண்டு தற்போதைய ஜோத்பூர் மகாராஜாவான 2ம் கஜ் சிங், இந்த இடத்தை சீரமைத்து பாலைவனச் சோலையாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டாராம்.
தாத்தாவின் ஆசை...
பாறைகள் நிறைந்த இடம் பாவ்லியா செடிக்கு பலியானதற்குக் காரணம், கஜ் சிங்கின் கொள்ளுத் தாத்தா மகாராஜா உமைத் சிங்தான். அவருக்கு இந்த இடத்தை பசுமை பொங்கும் இடமாக பார்க்க ஆசை வந்துள்ளது.
பாவ்லியா நச்சுச் செடி...
அதைத் தொடர்ந்து ஒரு விமானத்தின் மூலம் பாவ்லியா செடிகளின் விதைகளைத் தருவித்து அப்பகுதி முழுவதும் விதைத்துள்ளார். ஆனால் அதன் கொடூர முகம் அவருக்குத் தெரியாமல் போய் விட்டது. விளைவு, பல காலமாக இந்தப் பூமி நச்சுச் செடியின் பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டு விட்டது.
சவாலான பணி...
பாவ்லியா செடி பிற செடிகளை வளர விடாது. இருக்கிற தண்ணீரைப் பூராவும் அதுவே உறிஞ்சி எடுத்து விடும். ஆழமாக வேறூண்றி வளரக் கூடியதும் கூட. எனவே அதை அப்புறப்படுத்தும் பணி சவாலாக இருந்ததாக கூறுகிறார் கிஷன்.
லித்தோபைட் தாவரங்கள்...
இந்த நச்சுச் செடிகளை அகற்றி அங்கு தற்போது லித்தோபைட் எனப்படும் பாறைகளிலும் வளரக் கூடிய வகையிலான தாவர வகைகளை வளர்த்து பசுமை பொங்கும் பூமியாக மாற்றியுள்ளார் கிஷன்.
ரீவைல்டிங்...
ரீவைல்டிங் முறை மூலம் இதைச் சாதித்ததாக கூறுகிறார் கிஷன். மேலும் பாறைகளை துளையிடுவதில் வல்லவர்களான மார்வார் சமுதாயத்தினரையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் கிஷன்.
70 ஏக்கர் நிலம்...
கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலத்தில் இந்த சோலைவனத்தை கிஷன் தற்போது உருவாக்கியுள்ளார். ஒரு காலத்தில் இது பாறைப் பகுதி என்று கைவிடப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சோலைவனம்...
பாவ்லியா நச்சுச் செடி, மெக்சிகோவிலிருந்து இங்கு பரவியதாகும். அதை முற்றாக அப்புறப்படுத்துவது இயலாத காரியம் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் கிஷன் குழுவினரின் இடைவிடாத, அயராத முயற்சியால் இன்று அந்தச் செடி முற்றிலும் அழிக்கப்பட்டு அந்த இடமே சோலையாக மாறி நிற்பது குறிப்பிடத்தக்கது.
பொறுத்தார் பூமி ஆள்வார்...
ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு மரமாக களையெடுத்துள்ளது கிஷன் குழு. இதற்கான நாட்களும், பொறுமையும் அசாத்தியமானது, அயர வைக்கக் கூடியது. ஆனால் மிக மிக பொறுமையாக இதைச் செய்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை...
ஒரு செடிக்கு ஒரு ஆள் என்று போட்டு வேலை பார்த்துள்ளனர். இப்படியாக இந்த இடத்தையே சுத்தம் செய்து தற்போது அழகிய பூங்காவாக இதை மாற்றியுள்ளனர். ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம். மிகவும் ரம்மியமான காலமும் இதுதான்.
300 வகை தாவரங்கள்...
இப்போது இங்கு வளர்ந்து நிற்கும் மரங்களில் பறவைகள் கூட்டம் அலை மோதுகிறது. 300 வகையான மரங்கள், செடி கொடிகள், புதர்கள் இன்று காட்சி தருகின்றன.