ரோஹிங்யா முஸ்லீம்கள் விவகாரம்.. மத்திய அரசின் பிரமாண பத்திரம் லீக்கானது எப்படி?
டெல்லி: ரோஹிங்யா முஸ்லீம்கள் தொடர்பாக எந்த ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார்.
மியான்மரில் நடைபெற்றுவரும் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு தாக்குதல்களுக்கு அஞ்சி பலரும் இந்தியாவில் அகதிகளாக வந்து குடியேறுகிறார்கள். அவர்களை இந்திய அரசு திருப்பியனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுக்க கோரி 2 ரோஹிங்யா முஸ்லீம்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை வரும் 18ம் தேதி கோர்ட் விசாரிக்க உள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு தனது பதிலை பிரமாண பத்திரமாக தயாரித்து நேற்று தாக்கல் செய்ததாக ஒரு தகவல் வெளியானது. அந்த பிரமாண பத்திரத்தில், ரோஹிங்யா முஸ்லீம்கள் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அத்தகவலை கிரன் ரிஜிஜு மறுத்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், மத்திய அரசு அதுபோன்ற பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை எனவும், திங்கள்கிழமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் மீடியாக்களில் வெளியான தகவலில் உண்மையுள்ளது. ஏனெனில், கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாரித்த, மாதிரி பிரமாண பத்திரம்தான் லீக் ஆகியுள்ளது.
மீடியாவில் லீக் ஆகிவிட்டதால் பிரமாண பத்திரத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு திங்கள்கிழமை அதை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதிகள், ரோஹிங்யாக்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.