வர்மாவை வர சொல்லுங்க! பிரியங்கா காந்தி களமிறக்கிய மாஸ்டர்மைன்ட்.. இமாச்சலை காங்கிரஸ் வென்றது எப்படி?
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வினோத் வர்மா என்ற அரசியல் ஆலோசகரின் ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இமாச்சல பிரதேசத்தில் 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு இதுவரை சட்டசபை தேர்தலுக்கு பதிவான வாக்குகளிலேயே இதுதான் மிக மிக அதிகம் ஆகும்.
இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?பாஜக, காங்கிரஸில் கவனம் பெறும் 5 தொகுதிகள்! நிலவரம் என்ன?
மெஜாரிட்டி
அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 39 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 26 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. அங்கு தொங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் அதை முறியடித்து வெற்றிக்கு கிளியர் மெஜாரிட்டியை பெறும் நிலையை அடைந்து உள்ளது.
ஆட்சியை பிடிக்கும்
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு மூத்த தலைவர் பிரியங்கா காந்தி மிக முக்கிய காரணம் ஆவார். அவர்தான் காங்கிரஸ் கட்சிக்காக இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் வியூகங்களை வகுத்தார். வேட்பாளர்களை தேர்வு செய்தது தொடங்கி பிரச்சார வியூகங்களை வகுத்தது வரை அனைத்து முடிவுகளையும் எடுத்தது பிரியங்கா காந்திதான். ராகுல் காந்தி இமாச்சல பிரதேசம் பக்கமே எட்டிப்பார்க்காத நிலையில் பிரியங்கா காந்தி மட்டுமே தேர்தல் பணிகள் அனைத்தையும் மேற்கொண்டார்.
காங்கிரஸ் பிரச்சாரம்
இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்கள், சாலை பிரச்சாரங்கள் என்று மிகவும் பிசியாக பிரியங்கா காந்தி இருந்தார். அதோடு ராஜிவ் சுக்லாவை இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம் செய்து அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட செய்தார். அங்கு காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங். அவரின் மறைவிற்கு பின் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று கூறப்பட்டு வந்ததை ராஜிவ் சுக்லாவை வைத்து இல்லை என்று நிரூபணம் செய்து இருக்கிறார் பிரியங்கா காந்தி.
பிரியங்கா காந்தி
ராஜீவ் சுக்லா, பூபேஷ் பாகேல், சச்சின் பைலட், என்று ஒரு டீமையே களமிறக்கி தேர்தல் பணிகளை செய்ய வைத்தார். அதோடு வினோத் வர்மா போன்ற அரசியல் ஆலோசகர்களை களமிறக்கி தேர்தல் பணிகளை செய்ய வைத்தார். முக்கியமாக வினோத் வர்மாவின் கடைசி நேர ஆலோசனைகள்தான் அங்கு தேர்தல் முடிவுகள் மாற காரணமாக இருந்தது, சட்டீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் புபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர்தான் வினோத் வர்மா. முதலில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் நிலையில்தான் இருந்தது.
வினோத் வர்மா
அப்போதுதான் வினோத் வர்மா உள்ளே புகுந்து காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்ய தொடங்கினார். தேர்தல் பிரச்சார வியூகங்களை பிரியங்கா காந்திக்காக வகுத்து கொடுக்க தொடங்கினார். இவரின் வியூகங்கள் அங்கு பெரிய அளவில் களநிலவரத்தை மாற்றியது. இவரை கடைசி கட்டத்தில் களமிறங்கியது பிரியங்கா காந்தியின் ஐடியாதான். பொதுவாக ஒரு மாநிலத்தில் பாஜக வென்றுவிட்டால், அங்கிருந்து பாஜக ஆட்சியை அகற்றுவது கடினம். ஆனால் அந்த சாதனையை தற்போது செய்து காட்டி இருக்கிறார் வினோத் வர்மா.
ஆட்சி
தற்போது அங்கு முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. இதிலும் பிரியங்கா காந்தியே முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறித்து. சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் பிரதிபா சிங் ஆகிய 3 பேரும் போட்டியில் இருக்கிறார்கள். இதில் ஒருவர் முதல்வராக பிரியங்கா காந்தி மூலம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது இமாச்சல பிரதேச எம்எல்ஏக்கள் எல்லோரும் சட்டீஸ்கர் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். அங்கு காங்கிரஸ் ஆட்சி என்பதாலும், வினோத் வர்மாதான் வெற்றிக்கு காரணம் என்பதாலும், அவர் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக அங்கு உள்ள ரிசார்ட்டில் வைத்து இருக்கிறார்.