விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டதால் நிரம்பி வழியும் வங்கிகள்... ஏடிஎம்கள்... இன்றாவது பணம் கிடைக்கு
விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
டெல்லி: நாடு முழுவதும் நேற்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளதால் பணத்தை மாற்ற மற்றும் எடுக்க வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி புதிய 500 மற்றும் 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணப்பிரச்சனை தீராததால் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் மக்கள் பழைய நோட்டுகளை மாற்றவும் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் காத்துக் கிடக்கின்றனர். 10 நாட்களுக்குப் பிறகு நேற்று வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பட்டது. இதனால் மருத்துவ செலவு, அன்றாட செலவு உள்ளிட்டவற்றுக்கு பணமின்றி மக்கள் அவதிக்கு ஆளாயினர்.
விடுமுறைக்குப் பிறகு இன்று வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதால் அதிகாலை முதலே மக்கள் வங்கிகள் முன்பும் ஏடிஎம்கள் முன்பும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது ஏடிஎம்களில் வரிசையில் நின்றிருந்தவர்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்ததார்.
ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளாக வருவதால் அதனை மாற்ற முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சில்லறை கிடைக்காததால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக கூறிய மக்கள் இப்பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.