நான் ஒரு மரக் கட்டை... அமீத் ஷா பேச்சு!
டெல்லி: தண்ணீரில் மிதக்கும் மரக்கட்டை போல நான். நீரின் ஓட்டத்திற்கேற்ப நான் போவேன் என்று பாஜக தலைவர் அமீத் ஷா பேசியுள்ளார்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிப் பேசியுள்ளார் அமீத் ஷா.
அந்தப் பேட்டியில் காதல் நாடகங்கள், ராஜ்நாத் சிங், மதக் கலவரங்கள், கட்சியின் சட்டசபைத் தேர்தல் உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் ஷா.
ஷாவின் பேட்டியிலிருந்து...
முன்னுரிமை என்னவோ....
எனது குறுகிய கால முன்னுரிமை என்றால், வருகிற சட்டசபைத் தேர்தலில் பாஜகவை அமோக வெற்றி பெற வைக்கத் தேவையான திறமையான கட்சிக் குழுவை அமைப்பதுதான். மக்களிடம் மோடி அரசு நடத்தி வரும் நல்லாட்சி நல்ல பெயரை தேடிக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும். நீண்ட கால முன்னுரிமை என்றால், மக்களுக்கும், அரசுக்கும் இடையே நல்ல பாலமாக பாஜகவை மாற்றுவதே. அரசின் திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு செல்ல தேவையானதை செய்ய வேண்டும். மக்களின் எண்ணத்தை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும்.
எட்டு மாநிலத்திற்குக் குறி
தற்போது எட்டு மாநிலங்களில் பாஜக பலவீனமாக உள்ளது. அதை சரி செய்து அங்கும் பாஜகவை பலப்படுத்த முயற்சித்து வருகிறேன். மேலும் கட்சியில் புதிதாக வந்துள்ளவர்களுக்கு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானாவைப் பொறுத்தவரை நாங்கள் அங்கு பலமாக இருந்தபோதிலும் ஹரியானா, மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் இல்லை. ஜார்க்கண்ட்டில் பலவீனமாகத்தான் உள்ளோம். அங்கு இதுவரை மிகப் பெரிய மக்கள் தீர்ப்புடன் நாங்கள் ஆட்சியமைத்ததில்லை. கடந்த 15 வருடமாக நாங்கள் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இல்லை. ஹரியானாவில் ஆட்சியமைக்காமல் உள்ளோம். இங்கெல்லாம் மக்களி்ன் பேராதரவுடன் ஆட்சியமைக்க இலக்கு வகுத்துள்ளோம். அதைச் சாதிப்போம்.
முதல்வர் வேட்பாளர்கள்
மேற்கண்ட மூன்று மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் நாங்கள் இதுவரை முதல்வர் வேட்பாளர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சூழ்நிலைக்கேற்ப அதைச் செய்வோம். முதல்வர் வேட்பாளர்களை கண்டிப்பாக அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.
எங்களிடம் காங்கிரஸ் குழப்பம் இல்லை
காங்கிரஸில்தான் காந்திகளின் ஆதிக்கம் அதிகம். ஆனால் பாஜகவில் அப்படி இல்லை. ராஜ்நாத் சிஷ், நிதின் கத்காரி ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர். நான் இப்போது தலைவராக இருக்கிறேன். சிவராஜ் சிங் செளகான் நாடாளுமன்றக் குழுவில் இடம் பெற்றுள்ளர். நாங்கள் காங்கிரஸைப் போல அடிக்கடி முதல்வர்களை மாற்றுவதில்லை. மாறாக எங்களது முதல்வர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். கட்சி அவர்களுக்கு முழு ஆதரவோடு உள்ளது. கட்சிக்கும் சேர்த்து அவர்கள் பலம் சேர்க்கிறார்கள்.
மோடியை யாரும் தொந்தரவு செய்ததில்லை
மோடி 4 முறை முதல்வராக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு யாரும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. அதேபோலத்தான் சிவராஜ் சிங் செளகானும், ரமன் சிங்கும். வசுந்தரராஜே சிந்தியா கூட இடையில் தோற்றார். ஆனால் அவரை கட்சி கைவிடவில்லை. அவருக்குப் பலம் சேர்த்தது. இப்போது அவர் மீண்டும் முதல்வராகியுள்ளார். இப்படித்தான் தலைவர்களை நாம் வளர்க்க வேண்டும், உருவாக்க வேண்டும்.
மோடி அலை என்னாச்சு
முதலில் மோடி அலை இல்லை என்று மக்கள் கருதினார்கள். ஆனால் லோக்சபா தேர்தல் அதை பொய் என்று நிரூபித்தது. இப்போது மோடி அலை மங்கி விட்டது என்று கருதுகிறார்கள். இதுவும் கூட யூகம்தான். எதிர் வரும் சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுவும் தவறான கணிப்பு என்பது நிரூபிக்கப்படும்.
இடைத் தேர்தல் வேறு
இடைத் தேர்தல் முடிவை வைத்து எதையும் சொல்லக் கூடாது. இடைத் தேர்தல் என்பது மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பதில்லை. இடைத் தேர்தலால் எந்த அரசும் மாறுவதில்லை, உருவாக்கப்படுவதில்லை. ஆனால் பொதுத் தேர்தலில்தான் அரசுகள் மாறுகின்றன, புதிய அரசுகள் வருகின்றன. யார் முதல்வர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர முதல்வர் பதவி யாருக்கு
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி பாஜகவுக்கா, சிவசேனாவுக்கா என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. மாநில அளவில் பேச்சு நடந்து வருகிறது. அது பின்னர் இறுதியாக்கப்படும்.
ஹரியானாவில் தனித்துப் போட்டி
ஹரியானாவில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
ஆம் ஆத்மியின் ஸ்டிங்
ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அதுகுறித்த முழு விவரம் எனக்குத் தெரியவில்லை.
டெல்லிக்கு மீண்டும் தேர்தல் வேண்டாம்
டெல்லியில் மீண்டும் தேர்தல் வருவதை யாரும் விரும்பவில்லை. கடந்த ஒன்றரை வருடத்தில் 2 தேர்தல்கள் நடந்து விட்டன. இரண்டுமே பாஜகவுக்கு சாதகமாகவே இரு்தது. சட்டசபையில் நாங்கள்தான் தனிப் பெரும் கட்சியாக உள்ளோம். லோக்சபா தேர்தலில் ஏழு சீட்களையும் வென்றோம். மக்கள் தெளிவாகத்தான் தீர்ப்பளித்துள்ளனர். மாநில அளவில் மெஜாரிட்டி என்பது மட்டுமே பிரச்சினை. யாராவது பாஜகவுக்கு ஆதரவு தருவதாக இருந்தாலும் கூட அது நேர்மையான வழியில்தான் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி வரும் ஆதரவை நாங்கள் ஏன் மறுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக பலப்படுத்தப்படும்
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக பலப்படுத்தப்படும்.
நிதீஷ் -லாலுவுக்குத் தைரியம் இருந்தால்
இடைத் தேர்தல் வெற்றியை வைத்து நிதீஷ், லாலு சவால் விட்டு வருகின்றனர். தங்களுக்கு செல்வாக்கு கூடி விட்டதாக இருவரும் நினைத்தால், பீகார் சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தலை அறிவிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார்.
லவ் ஜிஹாத்....
லவ் ஜிஹாத் என்பது மீடியாக்களின் கற்பனை. அப்படி ஒன்றே இல்லை. அது சமூகப் பிரச்சினை. எங்கு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அதை பாஜக நிச்சயம் தட்டிக் கேட்கும். ஆனால் இதை நாங்கள் பிரசார உத்தியாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுவது தவறு.
உ.பி மதக் கலவரம்
நாட்டை இரண்டாகப் பிரிக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக ஆளாத மாநிலங்கள். இதில் நாட்டில் எங்குமே மதக் கலவரம் இல்லை. உ.பியில் மட்டுமே உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக உள்ளது. ஆனால் உபியில் மட்டுமே சமாஜ்வாடி இருக்கிறது. எனவே இந்தக் கலவரங்களுக்கு சமாஜ்வாடி ஆட்சியின் பாரபட்சமான, வாக்கு வங்கி அரசியலே காரணம். இதில் சந்தேகமே வேண்டாம். இதன் காரணமாகவே அங்கு மட்டும் மதக் கலவரங்கள் தலைவிரித்தாடி வருகின்றன. பாஜகவால்தான் கலவரம் என்றால் அது உத்தரகாண்ட்டில் நடந்திருக்க வேண்டும், மகாராஷ்டிராவில் நடந்திருக்கலாம், ஏன் காஷ்மீரில் கூட நடந்திருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் இல்லை. யோசித்துப் பார்க்க வேண்டும்.
மோடி அரசின் சாதனை
மோடி அரசின் பெரிய சாதனை என்றால் மக்கள் நம்பிக்கை கூடியுள்ளது. பிரதமர் வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை மோடி அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. மக்களுடன் சேர்ந்து தொழில்துறையினரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அனைவருமே நம்பிக்கையுடன் உள்ளனர். அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக மோடி அரசு உருவெடுத்துள்ளது.
பிரதமர் பதவி
எனக்குப் பிரதமர் பதவி குறித்து இப்போது எந்த ஆசையும் இல்லை. நான் தண்ணீரில் மிதக்கும் மரக்கட்டை போல. அது போகும் போக்கில் நானும் போவேன் என்றார் ஷா.