நேபாளில் நிலவும் மோசமான வானிலையுடன் போராடி இந்தியர்களை மீட்கும் விமானப்படை வீரர்கள்
டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளில் மீட்பு பணியை மேற்கொள்ள இந்திய விமானப் படை விமானிகள் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது செயல்பட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளில் மீட்பு பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. விமானப்படை விமானங்கள் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு ஏற்றிச் செல்கின்றன. பொருட்களை அளித்துவிட்டு அங்குள்ள இந்தியர்களை மீட்டு டெல்லிக்கு அழைத்து வருகின்றன.
இது குறித்து இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர்கள் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
வானிலை
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நேபாளத்தில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எங்கள் திட்டத்தை நான் செயல்படுத்தி வருகிறோம். நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவது தான் எங்கள் நோக்கம் என்றார்.
விமானங்கள்
டெல்லி, பாலமில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 10 விமானங்கள் நேபாளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இது தவிர சன்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 12 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. சன்டிகர் தளத்தில் இருந்து மோப்ப நாய்கள், மீட்பு குழுவினர் காத்மாண்டுவுக்கு சென்றுள்ளனர்.
மீட்பு பணிகள்
மீட்பு பணிகள் பற்றி பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சிதான்ஷு கர் கூறுகையில், நேற்று கைவிடப்பட்ட மீட்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்படும். மோசமான வானிலையையும் தாண்டி இந்திய விமானப்படை நேற்று இரவு மீட்பு பணியில் ஈடுபட்டது என்றார்.
ஆளில்லா விமானங்கள்
நேபாளில் சேதத்தின் அளவு தெரியாததால் ஆளில்லா விமானங்களை இந்திய விமானப்படை அனுப்பி வைக்கிறது. அவற்றை ஏற்கனவே நேபாளத்தை சென்றடைந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் இயக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள்
நேபாளத்தில் இருந்து இதுவரை 1,935 இந்தியர்கள் பத்திரமாக மீட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.