வெங்கையா வென்றால்.. சுதந்திரத்துக்கு பின் பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமை கிடைக்கும்!
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமை கிடைக்கும்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளநிலையில் அப்பதவிக்கு வரும் 5-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
வெற்றி வாய்ப்பு
பாஜகவுக்கு பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவாக உள்ள நிலையில் வெங்கையா நாயுடுவுக்கு தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
|
என்ன சிறப்பு?
கோபால கிருஷ்ண காந்தி வெற்றி பெற்றால் 13-ஆவது துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார். ஆனால் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார். கோபால கிருஷ்ண காந்தியோ கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார்.
வெங்கையா பிறந்தது
துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆந்திர மாநிலம், நெல்லூரில் கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ஆம் ஆண்டு பிறந்தவர்.
12 பேரும் சுதந்திரத்துக்கு முன்
இந்தியாவில் துணை ஜனாதிபதிகளாக பதவி வகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். எனவே இந்த தேர்தலில் வெங்கையா வெற்றி பெற்றால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.
மோடியைப் போல
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெறும் வாய்ப்பில் உள்ளார்.