கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்த பாஜக முன்வர வேண்டும்: கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் புதிய அரசை அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இனியாவது சட்டசபை தேர்தலை நடத்த பாஜக முன்வர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் கேஜ்ரிவால் அரசு ராஜினாமா செய்தது. அப்பொழுது முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சியே அமலில் இருந்து வருகிறது.
இதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போதெல்லாம் ஏதாவது புதிய அறிவிப்பை மத்திய அரசு தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது.

இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு மற்றும் டெல்லி ஆளுநர் புதிய ஆட்சி குறித்து முடிவெடுக்காமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் இனியாவது டெல்லியில் புதியதாக சட்டசபை தேர்தலை நடத்த பாரதிய ஜனதா முன்வர வேண்டும் என்றார்.
மேலும் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதாலேயே தேர்தலை நடத்த பாஜக அச்சப்படுகிறது என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications