சட்ட அமைச்சர் சோம்நாத் தவறிழைத்திருந்தால் நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி
டெல்லி: விபச்சாரம் மற்றும் போதை பொருள் விற்பதாக உகன்டா நாட்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி தவறிழைத்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான உகன்டா நாட்டு பெண், டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் இன்று வாக்குமூலம் அளித்தனர். அதில்" ஜனவரி 15 ஆம் தேதியன்று நள்ளிரவில் சோம்நாத் பார்தி தலைமையில் வந்தவர்கள் எங்கள் மீது கம்பால் தாக்கினார்கள். நாங்கள் இந்தியாவைவிட்டு வெளியேறவிட்டால் கொல்லப்படுவோம் என மிரட்டினார்கள். கருப்பாக இருப்பது ஒரு குற்றமா? என்று எங்களுக்கு தெரியவில்லை" என கூறியிருந்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் சோம்நாத் பார்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சோம்நாத் பார்தி தவறிழைத்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.