அலோபதி மீது விமர்சனம்: ரூ1,000 கோடி இழப்பீடு - ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் அதிரடி நோட்டீஸ்
ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறையை கடுமையாகவும் அவதூறாகவும் விமர்சித்த யோகா குரு என்று அழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ், ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவ முறையை மிக இழிவுபடுத்தி பேசினார். ஆங்கில மருந்துகளை சாப்பிட்டதால்தான் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனாவுக்கு பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்தனர் என்று பேசினார் ராம்தேவ்.
அடங்காத ராம்தேவ் கோஷ்டி-இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் இந்தியாவையே மத மாற்றம் செய்வதாக பகீர் புகார்
அலோபதி- ராம்தேவ் விமர்சனம்
மேலும் அலோபதி மருத்துவம், முட்டாள்தனமானது என்றும் சாடினார் ராம்தேவ். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாபா ராம்தேவ் தமது கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியது.
ராம்தேவ் மன்னிப்பு
இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான போரில் போராளிகளாக செயல்படுகின்றனர் மருத்துவர்கள். அந்த மருத்துவர்களை அவமரியாதை செய்யும் வகையிலான கருத்துகளை ராம்தேவ் வாபஸ் பெற வேண்டும் என்றார். இதனையடுத்து தமது கருத்துகளை ராம்தேவ் திரும்ப பெறுவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்தார்.
ரூ1,000 கோடி இழப்பீடு
இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு ராம்தேவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதற்காக எழுத்துப் பூர்வமாக வரும் 15 நாட்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதமாற்றம் புகார்
பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவையே கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர். ராம்தேவ் தரப்பின் இந்த புகாருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.