உரிமையாளர் அனுமதிக்காததால் கொட்டும் மழையில் விடிய விடிய மகனின் சடலத்துடன் வீதியில் நின்ற தாய்!
ஹைதராபாத்தில் உரிமையாளர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் மகனின் சடலத்துடன் தாய் ஒருவர் விடிய விடிய கொட்டும் மழையில் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: உரிமையாளர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் மகனின் சடலத்துடன் தாய் ஒருவர் விடிய விடிய கொட்டும் மழையில் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் இறந்த உறவினர்களின் உடலை தோளில் சுமந்து செல்வதும் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அபசகுணம் எனக் கூறி உரிமையாளர் ஒருவர் சிறுவனின் சடலத்தை வீட்டிற்குள் கொண்டுசெல்ல அனுமதி மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த தாய் மகனின் சடலத்துடன் விடிய விடிய கொட்டும் மழையில் வீட்டிற்கு வெளியேவே காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பலி
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரம்மா. இவருக்கு சுரேஷ் என்ற 10 வயது மகனும் மற்றொரு மகனும் உள்ளனர். ஈஸ்வரம்மா ஹைதராபாத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈஸ்வரம்மாவின் மகன் சுரேஷ் டெங்கு காய்ச்சலால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அனுமதி மறுத்த உரிமையாளர்
இதையடுத்து மகனின் சடலத்துடன் ஈஸ்வரம்மா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சடலத்துடன் உள்ளே வரக்கூடாது என வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் அனுமதி மறுத்துள்ளார்.
அபசகுணம் என்பதால்
தனது மகளுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்துள்ளதால் சடலத்தை உள்ளே கொண்டு வந்தால் அபசகுணம் எனக்கூறி அவர் அனுமதி மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த ஈஸ்வரம்மா கொட்டும் மழையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் சடலத்துடன் வீதியிலேயே நின்றுள்ளார்.
உதவிய அக்கம்பக்கத்தினர்
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் சடலத்தை வைக்க உதவினர். மேலும் இறுதி சடங்குக்கு தங்களால் முயன்ற பணத்தை கொடுத்துள்ளனர்.
வழக்குப்பதிவுக்கு வலியுறுத்தல்
வீட்டு உரிமையாளரின் இரக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.