ரூ.320 கோடி மேகி நூடுல்ஸை சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழித்து வரும் நெஸ்லே
டெல்லி: உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்ததையடுத்து ரூ.320 கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸை அழிக்கும் பணியில் நெஸ்லே நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
தடையை அடுத்து நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து மேகி நூடுல்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
வாபஸ்
ஜூன் 5ம் தேதியில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் மார்க்கெட்டில் இருந்து வாபஸ் பெறப்பட்டு வருகிறது. 2 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மேகி நூடுல்ஸ் அழிக்கப்படுகிறது. அழிக்கப்படும் மேகி நூடுல்ஸின் மதிப்பு ரூ.320 கோடி ஆகும் என்று நெஸ்லே தெரிவித்துள்ளது.
நூடுல்ஸ்
14 லட்சத்து 22 ஆயிரம் கிலோ மேகி நூடுல்ஸ் மட்டுமே நெஸ்லே இந்தியாவின் 5 தயாரிப்பு நிலையங்களில் உள்ளது. 89 ஆயிரத்து 75 ஆயிரம் டன் நூடுல்ஸ் வினியோக மையங்களிலும், 70 லட்சம் கிலோ நூடுல்ஸ் வினியோகஸ்தர்களிடமும் உள்ளது. மீதம் சில்லறை விற்பனையாளர்களிடமும் உள்ளது. அவற்றை எல்லாம் திரும்பப் பெற 10 ஆயிரம் டிரக்குகளாவது தேவைப்படும்.
சேமிப்பு
நெஸ்லே இந்தியாவில் உள்ள 38 வினியோக மையங்களில் இருக்கும் இடத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடத்தை வாபஸ் பெறப்படும் நூடுல்ஸை வைக்க பயன்படுத்துகிறது. இது தவிர வாபஸ் பெறப்படும் நூடுல்ஸை வைக்க கூடுதலாக 12 சேமிப்பு இடங்களை பிடித்துள்ளது நெஸ்லே.
அழிப்பு
கடந்த 9ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை நெஸ்லே நிறுவனம் வாபஸ் பெறப்பட்ட நூடுல்ஸில் 1 லட்சத்து 69 ஆயிரம் கிலோவை 3 சிமெண்ட் ஆலைகளில் வைத்து பொடியாக்கி அதை எரிபொருளுடன் கலந்து எரித்துவிட்டது. நூடுல்ஸை அழிக்கும் பணிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நூடுல்ஸையும் அழிக்க 5 முதல் 6 சிமெண்ட் ஆலைகளை பயன்படுத்தப்பட உள்ளது.
தினமும்
மேகி நூடுல்ஸ் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதும் 5 முதல் 6 சிமெண்ட் ஆலைகளில் தினமும் 7 லட்சம் கிலோ நூடுல்ஸ் அழிக்கப்படும் என்றும், அவற்றை அழிக்க குறைந்தது 40 நாட்கள் ஆகும் என்றும் நெஸ்லே அறிவித்துள்ளது.