சக்சஸ்.. சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2 வது முறையாக அதிகரிப்பு
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2 வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் 'சந்திரயான்-2' விண்கலம் செய்யப்போகிறது.
சந்திரயான் 2 என்ற விண்கலத்தை 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3' ராக்கெட் மூலம் கடந்த திங்கள் கிழமையன்று இந்தியாவின் 'இஸ்ரோ' வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் கடந்த இரு நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதிகாலை ஒரு மணியளவில் 2வது முறையாக சுற்று வட்டப்பாதையின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டது. சுமார் 883 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளைத் தொடர்ந்து விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தைத் தொட்டுள்ளது.
இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 3வது முறையாக வரும் 29 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் புவிட்டப் பாதையில் இருந்து விலகி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்க தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.