குண்டுவெடிப்பு சம்பவங்கள்: உலகின் 3வது ஆபத்தான நாடு இந்தியா
டெல்லி: குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் நடக்கிறதாம். குண்டுவெடிப்புகளை பொறுத்த வரையில் உலகின் 3வது அபாயகரமான நாடு இந்தியா தானாம்.
தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விட அதிகம் ஆகும்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு 108 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஈராக்கை அடுத்து இந்தியாவில் தான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.
வங்கதேசம், சிரியா
உள்நாட்டு பிரச்சனையால் தவிக்கும் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும், சிரியாவில் 36 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
எண்ணிக்கை குறைவு
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 241 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 212 ஆக குறைந்துள்ளது.
பலி
குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தபோதிலும் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் குண்டுவெடிப்புகளால் 130 பேர் பலியாகினர், 466 பேர் காயம் அடைந்தனர். 2012ல் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்புகள்
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகம். ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 2010ம் ஆண்டில் அதிகபட்சமாக 209 அதிநவீன குண்டுகள் வெடித்துள்ளன.
பாகிஸ்தான், ஈராக்
பாகிஸ்தான், ஈராக், இந்தியா ஆகிய நாடுகளில் தான் உலகின் 75 சதவீத குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கிறதாம். உலகின் பிற பகுதிகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளில் 69 சதவீதம் பொதுமக்களை குறி வைத்து நடக்கிறது. ஆனால் இந்தியாவில் 58 சதவீத குண்டுவெடிப்புகள் பொதுமக்களை குறி வைத்து நடத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு உடைமைகளை குறி வைத்தே நடத்தப்படுகிறது.