ஜெ.வை இழிவுபடுத்திய விவகாரம்... மத்திய அரசின் கண்டனத்தைத் தொடர்ந்து பணிந்த இலங்கை அரசு
டெல்லி: இலங்கை அரசின் பாதுகாப்பு துறை இணைய தளத்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் படங்களுடன் சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிடப்பட்டதற்கு மத்திய அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தமிழக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார் ஜெயலலிதா. அதிலும் குறிப்பாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, சமீபகாலமாக
தொடர்ந்து அதிக கடிதம் அவர் எழுதி வருகிறார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையப் பக்கத்தில் கிண்டல் செய்து விமர்சித்து கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையின் தலைப்பே விஷமத்தனமாக இருந்தது. நரேந்திர மோடிக்கு
ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களில் அர்த்தம் உள்ளதா என்பதுதான் அதன் தலைப்பு. இக்கட்டுரையை, ஷெனாலி டி வகிடு என்ற சிங்களர் எழுதியிருந்தார்.
இக்கட்டுரையில் தமிழக முதல்வர் தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இலங்கையுடனான உறவைத் துண்டித்து விடும்படி அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கொழும்புவில் உள்ள இந்திய தூதர் மூலம் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது.
எதிர்ப்பு வலுத்ததையடுத்து அக்கட்டுரையை தங்களது பாதுகாப்புத் துறை இணையதளத்திலிருந்து நீக்கிய இலங்கை அரசு, தனது செயலுக்காக மோடி மற்றும் ஜெயலலிதாவிடம் மன்னிப்பும் கோரியது குறிப்பிடத்தக்கது.