இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கு: கடற்கொள்ளை பிரிவு வாபஸ்- தூக்கிலிருந்து தப்பினர்!
டெல்லி: இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இருவரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர்.
கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 2 பேரை 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இத்தாலி சென்ற அவர்கள், தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இத்தாலி தூதரகத்தில் தங்கியிருக்கும் அவர்கள் மீது இந்திய கடற்படை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறும், 2 வீரர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரி இத்தாலி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.சலமேஸ்வர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த சட்டத்தின் மூலம் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications