இந்தியாவை உலுக்கிய பல லட்சம் கோடி ஊழல் வழக்குகள்.. கடைசியில் என்னாச்சு!
Recommended Video
டெல்லி: 2ஜி வழக்கில் இன்று சிபிஐ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை உலுக்கிய பல ஊழல் புகார்கள் குறித்த ஒரு பார்வை.
சர்வதேச அளவில் இந்தியா பல இடங்களில் முதலிடத்தில் இருந்தாலும் அதற்கு நேர்மாறாக பல வெட்கப்பட வேண்டிய விஷயங்களிலும் நம் நாடு முதலிடத்தில் இருக்கிறது. எய்ட்ஸ், சுகாதாராமின்மை, மதக்கலவரங்கள் என்று இந்த நீண்ட பட்டியலில் ஊழலிலும் நாம் உலகளவில் கொடிக்கட்டி பறந்து வருகிறோம்.
அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் ஊழலும், முறைகேடுகளும், லஞ்சமும் பெருகிக்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் உலகத்தையே உலுக்கிய இந்தியாவில் நடைபெற்ற பல லட்சம் கோடி மதிப்புள்ள ஊழல் வழக்குகள் குறித்து பார்க்கலாம். பின் வரும் வழக்குகள் அனைத்தும் லட்சம் கோடிகளை தாண்டிய ஊழல் வழக்குகள் என்பதாலோ என்னவோ நீதித்துறை அதனை பல ஆண்டுகளாக விசாரித்து வருகிறது.
பூமியில் 1.80லட்சம் கோடி ஊழல்
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2 மாத கால அவகாசத்தையும் நீதிபதிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
காற்றில் 1.76லட்சம் கோடி ஊழல்
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது 2ஜி வழக்கு என்றால் அது மிகையாகாது. உலக நாடுகள் மட்டுமின்றி, ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் புண்ணியத்தில் இந்த வழக்கு இந்தியாவின் பட்டித்தொட்டி என்றும் பிரபலமாகின. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 1.76லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையால் இந்த வழக்கு வெளியே வந்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
நிலத்தில் 2லட்சம் கோடி ஊழல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள வக்ஃபு வாரியத்திற்கு அரசால் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கர்நாடக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருந்த அன்வர் என்பவர் இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் இவ்வாறு அபகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தெருவிளக்கில் 70ஆயிரம் கோடி ஊழல்
டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில், பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சிகளும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னையை கிளப்பின. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. காமன் வெல்த் போட்டிகளுடன் நேரடியாக தொடர்புடைய பலரது வீடுகளில், சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கில் காமன்வெல்த் அமைப்பின் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் பலரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
பேப்பரில் 20ஆயிரம் கோடி ஊழல்
நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ பல்வேறு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தது. அதில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் டெல்கி, அப்துல் வாஹித் உள்ளிட்டருக்கு சிறை தண்டனையும் கிடைத்தது. இந்த வழக்கில் திமுக தலைவரை கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மாறனை நள்ளிரவு கைது செய்த சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் டிஐஜி முகமது அலியும் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சத்யம் ஊழல், போபர்ஸ் ஊழல்
இவ்வாறான வழக்குகளின் பட்டியலில் சத்யம் நிறுவனத்தின் ஊழல் வழக்கு, போஃபர்ஸ் ஊழல் வழக்கு, பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மாட்டுத்தீவன ஊழல் வழக்கு, ஹர்ஷத் மேத்தா வழக்கு உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகள் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டவையாகும்.