பாகிஸ்தானுக்கு எப்.16 ரக போர் விமானங்களா? அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்- தூதருக்கு சம்மன்!!
டெல்லி: பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா வழங்குவதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இம் மசோதாவில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மிகவும் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு புதிய எப்-16 ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 18 புதிய எப்-16 ரக போர் விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்கப்பட்டுவிடுமாம்.
இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா போர் விமானங்களை வழங்குவதில் இந்தியாவின் அதிருப்தியை வெளியிட இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.