இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Prachand இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விமானப் படையில் இணைக்கப்பட்டது!
ஜோத்பூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Prachand என பெயரிடப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்தது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் ஒரு உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர் இன்று விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயரமான மலைகளில் பறக்கக் கூடியதாக இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில், மழை காலங்களில் அடர் காடுகளில் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். மொத்தம் 5.8 டன் எடை கொண்டது இந்த இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர். ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பொருத்தி இந்த ஹெலிகாப்டரில் இருந்து தாக்குதல் நடத்தலாம்.
ரூ3,887 கோடி மதிப்பிலான 15 ஹெலிகாப்டர்கள் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானப் படைக்கு 10 ஹெலிகாப்டர்களும் ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இந்த Prachand என பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இந்த ஹெலிகாப்டர் இணைக்கப்படுட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமான படை தளபதி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பில் விமானப் படை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் பாதுகாப்பை விமானப் படை வலிமையாக்கி உள்ளது. தற்போது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் நாட்டின் விமானப் படையின் வலிமை கூடுதலாகும். 1999 கார்கில் யுத்த காலத்திலேயே நமக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தேவையானதாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகால ஆராய்ச்சி, மேம்பாட்டின் விளைவாக இன்று நாம் தாக்குதல் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளோம் என்றார்.