இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த அசோக் நியமனம்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய எண்ணை சந்தைப்படுத்துதல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பொரேசனுக்கு புதிய தலைவராக சென்னையை சேர்ந்த பி.அசோக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக பி.அசோக் நியமிக்கப்படுகிறார். ஜூலை 16ம்தேதி முதல் அவர் தனது பதவிக்காலத்தை தொடங்கியுள்ளார். இதற்கு முன்பாக, சில்லரை விற்பனையின் செயல் இயக்குனராக டெல்லியில் பணியாற்றிவந்தார். அதற்கு முன்பாக, நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய வர்த்தக பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மெட்ராஸ் பல்கலை. மாணவர்
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டம் பெற்ற அசோக், மேலாண்மை திறமை குறித்த முதுகலை படிப்பை, தேசிய மேலாண்மை மேம்பாட்டு இன்ஸ்ட்டிடியூட் மூலம் பெற்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனுபவம் மிக்கவர்
ஆயில் மற்றும் காஸ் தொழிலில் 33 வருடத்துக்கும் மேலான அனுபவம் அசோக்கிற்கு உள்ளது. இந்திய ஆயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் வர்த்தக நிறுவனமாகும். இதன் விற்பனை வருவாய் ரூ.473210 கோடிகள். 2013-14ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின், நிகர வருவாய் ரூ.7019 கோடிகளாகும்.
9 ஆண்டுகளுக்கு பிறகு
2005ம் ஆண்டு ராமச்சந்திரன் இந்தியன் ஆயில் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து வந்த சார்தக் என்பவருக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் ஆயில் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மோடியின் முதல் பெரிய முடிவு
கடந்தாண்டு அக்டோபர் 9ம்தேதியே அசோக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முந்தைய காங்கிரஸ் அரசு இவரது நியமனத்தை உறுதி செய்யவில்லை. மோடி அரசு வந்த பிறகு இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனத்தின் முக்கிய பதவியொன்றை நிரப்பியது மோடி அரசுக்கு இது முதல் முறை.












Click it and Unblock the Notifications