தமிழக குழந்தைகளை கடத்தி வந்து தூக்க மாத்திரை கொடுத்து பெங்களூரில் பிச்சை எடுக்க வைக்கும் மாஃபியா!
பெங்களூர்: சிக்னல்களில் பிச்சை எடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு குழந்தைகள் கடத்தப்படுவதும், அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து பிச்சை எடுக்க வைப்பதும் அம்பலமாகியுள்ளது.
குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுக்க வைக்கும் மாஃபியா பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சிக்னல்களில் பசியும், பட்டினியுமாக, வயிறு ஒட்டிய நிலையில் உள்ள குழந்தைகளை காண்பித்து பிச்சை எடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று மாஃபியா கும்பல் நினைக்கிறது.
தமிழகத்தில் இருந்து கடத்தல்
இதற்காக அண்டை மாநிலமான தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவித்த குழந்தைகளையும் இக்கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி வந்து பிச்சைக்காரர்களிடம் ஒப்படைக்கின்றனர். தினமும் பிச்சை எடுப்பதில் வரும் குறிப்பிட்ட அளவு பணத்தை தங்களுக்கு தந்துவிட வேண்டும் என்று மாஃபியாக்கள், பிச்சைக்காரர்களிடம் வலியுறுத்துகிறார்கள்.
தூக்க மாத்திரை
வெயிலிலும், மழையிலும் சிக்னல்களில் பசிக்கு நடுவே குழந்தைகள் இருக்க வேண்டியுள்ளதால், அவை அழ ஆரம்பிக்கும். அவ்வாறு அழுது அடம் பிடித்தால், அது உண்மையிலேயே பிச்சை எடுக்கும் பெண்மணி பெற்ற பிள்ளையாக இருக்காது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் ஏற்படும். இதை தவிர்க்க குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை, அல்லது போதை மருந்து அளிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து குழந்தைகள் மீட்பு
பெங்களூரில் சமீபத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தி, பிச்சைக்காக கடத்தி வரப்பட்ட 5 குழந்தைகளை மீட்டனர். அனைவருமே 3 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளாகும். பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹள்ளி பகுதியில் மஃப்டியில் சென்று போலீசார் இக்குழந்தைகளை மீட்டனர்.
ஆறு பேர் கைது
விசாரணையில் அந்த குழந்தைகள் தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது தூக்க மாத்திரை அல்லது போதை மருந்து கொடுத்து விடுவது பிச்சைக்கார கும்பலின் வழக்கம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பெண்கள் மற்றும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.
பிச்சை போடுவது தவறு
பிச்சை எடுப்பது மட்டுமின்றி பிச்சை போடுவதுமே சட்டப்படி குற்றமாகும். பிச்சை என்ற ஒரு தொழில் கிடையாது. எனவேதான் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பெங்களூரில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 வேளையும் சாப்பாடு, துணி போன்றவை அளிக்கப்படுகின்றன. இருப்பினும் வருவாய் பார்த்து பழகிய பிச்சைக்காரர்கள் அங்கிருந்து தப்பியோடி சிக்னல்களுக்கே வருவது வழக்கமாக உள்ளது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு தரலாமே தவிர பிச்சை அளிக்க கூடாது. அப்போதுதான் குழந்தை கடத்தல்களை தடுக்க முடியும்.