2ஜி: புதிய சர்ச்சையில் சி.பி.ஐ. இயக்குநர்! ஊழலில் தொடர்புடையோரை சந்திப்பதாக பகீர் புகார்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களை ரஞ்சின் சின்கா சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஞ்சின் சின்கா வீட்டு வருகைப் பதிவேட்டை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நலன்களுக்கான வழக்கு அமைப்பு வழக்கு தொடுத்தது. அதை உச்சநீதிமன்றம் விசாரித்து 122 உரிமங்களை ரத்து செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணை நடத்தி வந்த டி.ஐ.ஜி. சந்தோஷ் ரஸ்தோகியை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா மாற்றியது முன்னர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தடுத்து நிறுத்தியது.
சர்ச்சை சந்திப்பு
தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை அவர் சந்தித்து வருவதாக பகீர் புகார் கூறப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த் பூஷண்
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் பொது நலன்களுக்கான சட்ட அமைப்பின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நேற்று இந்த பிரச்சினையை எழுப்பினார்.
ரஞ்சித் சின்காவுடன் சந்திப்பு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிறுவனம் ஒன்றின் மூத்த நிர்வாகிகள் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்காவை அவரது வீட்டுக்கு சென்று கடந்த 15 மாதங்களாக சந்தித்து வந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், நேற்று இரவு மிகவும் கவலை தரக்கூடியதும், வெடிபொருள் போன்ற ஒன்றையும் நான் கடந்து வர நேரிட்டது. சி.பி.ஐ. இயக்குநருடைய வீட்டின் நுழைவு பதிவேடு...'' என தொடங்கி ஒரு குறிப்பை வாசிக்க முயற்சித்தார்.
சிபிஐ வழக்கறிஞர் குறுக்கீடு
அப்போது சி.பி.ஐ.க்காக இந்த வழக்கில் ஆஜராகி வருகிற மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தலையிட்டார். இது தொடர்பான பதிவேடுகள் அனைத்தையும் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
கற்பனையானது- சின்கா வழக்கறிஞர்
சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்காவின் வழக்கறிஞர் விகாஸ் சிங்கும், இத்தகைய குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. சி.பி.ஐ. என்ற அமைப்பினை அழிப்பதற்கு முயற்சி நடப்பதாக தோன்றுகிறது என்றார்.
நாளை விசாரணை
உடனே நீதிபதிகள், பிரசாந்த் பூஷண் வாசிப்பதை தடுத்து நிறுத்தினர். அவர்கள், அதன் நகலை நீங்கள் சி.பி.ஐ.க்கும், அதன் இயக்குநருக்கும் அளித்தால், வியாழக்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.
மேலும் குற்றவாளிகள் சிலரை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படுவதால் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா, ஸ்பெக்ட்ரம் வழக்கின் அனைத்து விசாரணையிலிருந்தும் விலகி இருக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ மறுப்பு
ஆனால் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா பற்றி பிரசாந்த் பூஷண் கூறிய புகாரை சி.பி.ஐ. திட்டவட்டமாக மறுத்துள்ளது. சி.பி.ஐ. இயக்குநர் வீட்டில் பார்வையாளர்களின் வருகையை பதிவு செய்யும் பதிவேடு எதுவுமே கிடையாது என்று சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.