ரூ.2 ஆயிரம் கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பத்திரிகைகளுக்கு இன்போசிஸ் நோட்டீஸ்
பெங்களூர்: நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக கூறி இன்போசிஸ் நிறுவனம் சார்பில் மூன்று ஆங்கில பத்திரிகைகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ். இதன் முன்னணி மேலாண்மை குழுவில் இருந்த அதிகாரிகள் சிலர் நிறுவனத்தை விட்டு சமீபத்தில் வெளியேறினர்.
இதையடுத்து புதிய தலைமை அலுவலரை நியமிக்க இன்போசிஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் குறித்து விமர்சனம் செய்து சில மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.
இந்த செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்போசிஸ், அந்த மீடியாக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி எக்கனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இன்போசிஸ் சார்பில் மான நஷ்டமாக ரூ.2ஆயிரம் கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அம்மூன்று பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் ஆட்சேபத்துக்குறிய கட்டுரைகளை சுட்டிக்காண்பித்து, அதை இன்னும் 24 மணி நேரத்தில் நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.