சோவியத் யூனியனில் நேதாஜி கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை.. எழுத்தாளர் அனுஜ் தர்
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது கடைசிக்காலத்தில் சோவியத் யூனியனில் இருந்தார் என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளது சரிதான். ஆனால் அவர் அங்கு வைத்துக் கொல்லப்பட்டார் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை என்று பிரபல எழுத்தாளர் அனுஜ் தர் கூறியுள்ளார்.
அனுஜ் தர் நேதாஜி குறித்து பல நூல்களை எழுதியவர். நேதாஜி குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
நேதாஜி குறித்த மர்மம் தொடர்கதையாக நீடித்து வருகிறது அவர் விமான விபத்தில் இறந்தாரா அல்லது சுப்பிரமணியன் சாமி கூறுவது போல சோவியத் சர்வாதிகாரி ஸ்டாலின் உத்தரவின்படி சைபீரிய சிறையில் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பது மர்மமாகவே உள்ளது. அரசு தன்னிடம் உள்ள ஆவணங்களை பகிரங்கப்படுத்தும் வரை இந்த மர்மங்களும் நீடித்தபடிதான் இருக்கும்.
இந்த நிலையில் இதுகுறித்து அனுஜ் தர் விவரித்துள்ளார். சமீபத்தில் அவர் நேதாஜி குறித்த புதிய நூலை எழுதியுள்ளார். இந்தப் பின்னணியில் ஒன்இந்தியாவுக்கு அனுஜ் தர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அனுஜ் தர்ரின் பேட்டியிலிருந்து...
ஸ்டாலினால் கொல்லப்பட்டார் நேதாஜி என்று சமீபத்தில் சாமி கூறியுள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
இருக்கிற தகவல்களை வைத்துப் பார்த்தால், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நேதாஜி சோவியத் யூனியனில் இருந்தார் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அதன் பின்னர் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அது ஜப்பானியர்கள், நேதாஜிக்காக சொன்ன பொய்யாகும். நேதாஜி தனக்கு சாதகமான நாட்டுக்குத் தப்பிப் போக வகை செய்யும் விதத்தில் அந்தக் கதையை ஜப்பானியர்கள் பரப்பி விட்டனர்.
உண்மையில், 2ம் உலகப் போர் முடிய சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த திட்டம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து விட்டார் போஸ். அவர் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் டோக்கியோவில் உள்ள சோவியத் தூதருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சோவியத் யூனியன் உதவ வேண்டும் என்று கோரியிருந்தார். அப்போது சோவியத் யூனியும், ஜப்பானும் நட்பு நாடுகளாக இருந்தன. போர் முடியும் வரை இது தொடர்ந்தது.
1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நிலை குறைத்து விவாதிப்பதற்காக நேதாஜி ரகசியமாக சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தார் என்று உளவுத் தகவல் ஒன்றும் இருந்தது.
ஆரம்பத்திலிருந்தே நேதாஜி, சோவியத்துக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். சோவியத் நிர்வாகமும் கூட அவருக்கு ஆதரவாகவே இருந்தது. உண்மையில் 1941ம் ஆண்டு காபூலிலிருந்து பெர்லினுக்கு நேதாஜி தப்பிச் செல்ல சோவியத் படையினர்தான் உதவி செய்தனர். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டிருப்பார் நேதாஜி.
எனவே, நேதாஜிக்கு உதவிய சோவியத் யூனியனால், நேதாஜிக்கு உதவிய ஸ்டாலினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுவது லாஜிக்படி சரிவரப் பொருந்தவில்லை.
இருப்பினும் ஸ்டாலின் குறித்து உலகுக்கே நன்கு தெரியும். அவர் எவ்வளவு மோசமானவர் என்று. அவரது வரலாற்றைப் படித்தால் அதைத் தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும் சந்தேகத்தை ஆதாரமாக கூற முடியாது. நேதாஜி தனது கடைசிக்காலத்தில் சோவியத் யூனியனில் இருந்தார் என்று சாமி சொல்வது சரிதான். அந்த வகையில் மீண்டும் நாட்டுக்கு ஒரு சேவையை செய்துள்ளார் சாமி. ஆனால் நேதாஜி சோவியத் யூனியனில் கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
இந்த அரசு நேதாஜி ஆவணங்கள வெளியிடும் என்று நம்புகிறீர்களா?
முதலில் நாம் ஒரு அரசை வைத்துள்ளோம். அதில் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள்தான் இந்தப் பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்து வைக்க ஏதாவது செய்ய வேண்டும். எனவே அரசு ஏதாவது செய்யும் என்று நம்புகிறேன். பொதுமக்களிடையே இதுதொடர்பாக இப்போது பெரும் எதிர்பார்ப்பும், ஆதங்கமும் அதிகரித்துள்ளது. இதை அரசு புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
கடந்த நவம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் அலுவலகத்திடம் தகவல் கோரியபோது, அதைக் கொடுக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. மேலும் மக்களிடையே இந்த விவகாரத்தில் இனியும் ஆர்வம் இல்லை என்றும் கூறி விட்டனர். எனவே இப்போது மக்கள் மீது இந்தத் தகவலை நாம் திணிக்க வேண்டியுள்ளது.
மன்மோகன் சிங் அரசை விட மோடி அரசு, மக்கள் நெருக்கத்திற்குப் பணியும். நேதாஜி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் நெருக்கம் அதிகரித்தால் நிச்சயம் மோடி அரசு இறங்கி வரும்.
சீனாவுக்குத் தப்பிச் செல்வது போல நாடகமாடினார் போஸ் என்கிறார்களே.. அதுகுறித்து ?
நேதாஜி, தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்பது ஜப்பானியர்கள் நடத்திய நாடகம் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. மன்சூரியா வழியாக சோவியத் யூனியனுக்கு நேதாஜி தப்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால் நேதாஜியின் மரணச் செய்தியானது, அவருடைய நெருங்கிய தளபதியான ஹபிபூர் ரஹ்மான் என்பவர் பின்னர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்ட ஒன்றுதான். ஆனால் ரஹ்மான் கூறியது உண்மையல்ல என்பது பின்னர் தெரிய வந்தது. அவரே கூட தான் போஸின் உத்தரவுப்படிதான் செயல்பட்டதாக, பேசியதாக நேதாஜியின் சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் நேதாஜியின் மரணச் செய்தியை உண்மையாக்கும் வகையில் இசிரோ ஒகுரா என்ற ராணுவ வீரரின் உடலை நேதாஜியின் உடல் போல வெளியுலகுக்குக் காட்டினர் ஜப்பானியர்கள். மேலும் ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தி என்று கூறப்படுவதும் கூட அந்த வீரரின் அஸ்திதான். எனவேதான், இந்த உண்மை தெரிந்துதான் அந்த அஸ்தியை எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த நமது அரசு மறுத்து வருகிறது, மெளனம் காக்கிறது.
ஸ்டாலினால் போஸ் கொல்லப்பட்டது குறித்து நேருவுக்குத் தெரியுமா?
சோவியத் யூனியனில் போஸ் இருந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள், உளவுத்துறைத் தகவல்கள், ஆவணங்கள் நமது அரசிடம் உள்ளது என்பதை நம்ப முடியும். இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்தியாவின் முதல் தூதராக தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டை நியமித்தார் நேரு. ஆனால் அவரால் ஸ்டாலினைப் பார்க்கக் கூட முடியவில்லை. மாறாக நேருவை ஸ்டாலினுக்குப் பிடிக்காது. அவரை வெறுத்தார். இந்தியாவையும் அவர் சந்தேகத்திற்குரிய நாடாகவே ஸ்டாலின் பார்த்தார்.
எனவே இதன் அடிப்படையில் பார்த்தால், சாமி சொல்வதைப் போல நேதாஜியைக் கொல்வது குறித்து நேருவிடம் ஸ்டாலின் கூறியிருக்கலாம் என்று நம்ப முடியாது. அதிலும் லாஜிக்கே இல்லை.
நேரு காலத்தில் நேதாஜி விவகாரம் தொடர்பாக சோவியத் யூனியனுடன் இந்தியா பேசியதே இல்லை என்பதே அரசின் அதிகாரப்பூர்வ தகவலாகும். அதிகாரப்பூர்வமற்ற முறையில் பார்த்தால், சோவியத் யூனியனில் நேதாஜி இருப்பது குறித்து விஜயலட்சுமி பண்டிட்டுக்கும், அவருக்குப் பின்னால் வந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும் நன்கு தெரிந்திருந்தும் கூட நேதாஜியை மீட்க அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டனர் என்பதே உண்மை.
ஏன் அவர்கள் போஸ் விவகாரத்தை அப்படியே விட்டு விட்டார்கள்?
ஆரம்பத்தில் காந்தி, நேரு முதல் அனைத்துத் தலைவர்களுமே நேரு உயிரோடு இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தனர். 1946ம் ஆண்டு அக்டோபர் கடைசியில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், போஸின் மரணச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார். ஆனால் 1946ம் ஆண்டின் இறுதியில் நேரு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் போஸ் தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறினார்.
அதுதான் நமது அரசு செய்த முதல் பாவம். அதன் பின்னர் வந்த அரசுகள் இதன் அடிப்படையிலேயே பேசி வந்தன. வரலாற்று ஆசிரியர்களும் இதையே பின்பற்றி வந்தனர் என்பதுதான் இங்கு கவனிப்பதற்குரியது. அமைச்சர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் உண்மை எப்போதும் அப்படியேதான் இருக்கும். நேரு சொன்னதற்குப் பிறகு உண்மையை அறிய பலரும் முயன்றனர். ஆனால் அதை எட்ட முடியவில்லை. கடைசியில் சர்தார் வல்லபாய் படேலும் கூட போஸ் இறந்து விட்டதாக கூற வேண்டிய நிலை வந்தது. இன்று பாஜகவுக்கு இந்தப் பிரச்சினை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
படேல் சொன்னது உண்மையா அல்லது நேரு சொன்னது உண்மையா.. இதில் யார் சொன்னது உண்மை, பொய் என்பது மத்திய அரசின் கையில் உள்ள ஆவணம் வெளியிடப்படுவதைப் பொறுத்து அமையும்.
தற்போது அரசிடம் பல முக்கியான ரகசிய ஆவணங்கள் உள்ளன. அதேபோல அதி முக்கியமான ரகசிய ரஷ்ய ஆவணங்களும் உள்ளன. ஆனால் இதை யாருக்கும் வெளிப்படுத்த முடியாது என்று மறுத்து வருகிறது மத்திய அரசு. அதன் நிலைப்பாடு தொடரும் வரை மர்மங்கள் கடைசி வரை மர்மங்களாகவே இருக்கும். அது வெளியாகும் வரை சந்தேகங்கள், ஊகங்கள் உலா வந்தபடிதான் இருக்கும்.
உண்மையில் போஸ் குறித்த தனது நிலைப்பாட்டை நேரு மாற்றிக் கொள்ள முக்கியக் காரணம் லார்ட் மெளன்ட்பேட்டன் என்கிறார்கள். அவருடனான சந்திப்புக்குப் பிறகே போஸ் குறித்த தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்கிறார்கள்.
மேலும் நேருவிடம் மெளன்ட்பேட்டன் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டாராம்.. போஸ் திரும்பி வருவதாக வைத்துக் கொண்டால், இந்தியாவின் பிரதமராக யார் இருப்பார்...?